தேனியில் மாணவர்களுக்காக பாலம் கட்டிய பள்ளி நிர்வாகம்
தேனியில் மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நிர்வாகம் தனது பள்ளி மாணவர்களுக்காக தனியாக ரயில்வே மேம்பாலம் கட்டி உள்ளது.
HIGHLIGHTS
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நிர்வாகம் ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. இதில் மொத்தம் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு பாரஸ்ட் ரோடு, கொண்டு ராஜா லைன் பகுதியில் பாதைகள் உள்ளன. ஆனால் எடமால் தெருவிற்கும், பள்ளிக்கும் இடையே நகரின் மையத்தில் சரியாக ரயில்வே லைன் செல்கிறது. இதனால் எடமால் தெருவின் மறு பகுதியில் உள்ள தேனியில் வசிக்கும் மாணவர்கள் ரயில்வே லைனை கடந்து பள்ளிக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் சில கி.மீ., சுற்றி வர வேண்டும். அப்போது ரயில் வந்தால் எந்த வழியாக வந்தாலும் மூடப்பட்ட கேட்டில் சிக்க வேண்டும்.
இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வர தாமதம் ஆகும். எனவே எடமால் தெருவையும், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியையும் இணைத்து பள்ளி நிர்வாகம் முன்பு ரயில்வே மேம்பாலம் பாலம் கட்டியிருந்தது. அந்தப்பாலம் சேதமாகி விட்டது. இடையில் 11 ஆண்டுகள் தேனிக்கு ரயில் வரவில்லை. இதனால் பாலத்தின் அவசியம் தேவைப்படாமல் இருந்தது. தற்போது மதுரை- தேனி அகல ரயில் இயக்கப்பட உள்ளது. எனவே மாணவர்கள் அவதிப்படக்கூடாது என்பதற்காக தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நிர்வாகம் தனது சொந்த செலவில் தனியாக ரயில்வே மேம்பாலம் கட்டி உள்ளது. இந்த பாலத்தை மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள் திறந்து வைத்தனர்.