மீண்டும்..மிரட்டுது அரிசிக் கொம்பன்
கூடலுார், லோயர்கேம்ப், குமுளி பகுதிகளை மிரட்டி வந்த அரிசிக் கொம்பன் யானை கழுதை மேட்டு பகுதியில் தங்கியுள்ளது.
HIGHLIGHTS

கூடலுார் வனப்பகுதியில் அரிசிக் கொம்பன் யானை.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் சங்கரபாண்டிய மெட்டு மலைப்பகுதியும், சின்னக்கானல் பகுதியும் தான் அரிசிக்கொம்பன் யானையின் பிறந்த வனப்பகுதி. இங்கு வளமாக வாழ்ந்த அரிசிக்கொம்பன் ரேஷன் அரிசியையும், ஜீனியையும் சுவைத்துப்பழகியதால் வந்த வினை தான் 25க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள். குடியிருப்புகளுக்குள் தான் அரிசியும், ஜீனியும் உள்ளன என்பதை உணர்ந்து கொண்ட அரிசிக் கொம்பன் வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்புகளுக்குள் வந்தது. அங்குள்ள ரேஷன்கடைகளை அடையாளம் கண்டது. உடைத்து அரிசியும், ஜீனியும் சாப்பிட்டது. அது போன்ற சமயங்களில் கண்ணில் பட்ட மனிதர்களை மிதித்து கொன்றது. இப்படி கடந்த 10 ஆண்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 25ஐ தாண்டியது.
இதனால் அரிசிக் கொம்பனை கண்டாலே கேரள தமிழர்களும், மலையாளிகளும் அலற தொடங்கினர். தினமும் அரிசிக்கொம்பன் நடமாட்டம் குறித்த தகவல்களை தெரிந்து கொண்டு, அரிசிக் கொம்பன் இருக்கும் பகுதிக்கு வேலைக்கு செல்லாமல் தவிர்த்து வந்தனர். இப்படி பல நுாறு மாதங்கள் வேலையிழந்தனர்.
உயிரிழப்பு, வேலையிழப்பினை ஏற்படுத்திய அரிசிக் கொம்பனை பிடித்த கேரள வனத்துறை மேட்டகானம் வனப்பகுதியில் விட்டது. அங்கிருந்து தேக்கடி வனப்பகுதிக்குள் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த யானை மேகமலைக்குள் வந்து விட்டது. ஒட்டுமொத்த மேகமலையும் கலங்கிப்போனது. 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் மேகமலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. இங்கேயும் வேலையிழப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.
அங்கிருந்து மெல்ல நகர்ந்த அரிசிக் கொம்பன் இன்று காலை குமுளி ரோஜாப்பூ கண்டம் குடியிருப்புக்குள் புகுந்தது. இந்த ரோஜாப்பூ கண்டம் கூடலுார் நகராட்சி, குமுளி பஞ்சாயத்து இரண்டிற்கும் சொந்தமான குடியிருப்பு பகுதி ஆகும். இங்கு வந்த அரிசிக் கொம்பன் கூடலுார்- குமுளி ரோடு வழியாக வந்து பெரியாறு அணை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரிய குடியிருப்பு வழியாக சென்று மீண்டும் கூடலுார் வனப்பகுதிக்குள் வந்து தற்போது கழுதை மேட்டு வனத்தில் நேற்று இரவு உறங்கிக் கொண்டிருந்தது. கூடலுார் வனத்துறையினர் அரிசிக் கொம்பனை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மீண்டும் அரிசிக் கொம்பன் வந்து விடுமோ என கேரளா அலறத்தொடங்கி உள்ளது. கழுதை மேட்டில் அரிசிக்கொம்பன் முகாமிட்டிருப்பதால் கூடலுார், லோயர்கேம்ப்பில் பதட்டம் குறையவில்லை.
இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் கூறியதாவது: ஒரு யானையை வைத்து கேரளா அரசியல் நடத்தி வருகிறது. இந்தியா முழுவதும் ஒரே வனத்துறை சட்டம் தானே. விலங்குகளுக்கு எந்த எல்லையும் இல்லையே. யானையை பிடித்ததும் கேரள தலைமை வனப்பாதுகாவலர் இந்த யானையை பரம்பிக்குளம் ஆழியாறு வனப்பகுதிக்குள் விடலாம் என்று தான் ஆலோசனை கூறினார். இதனை கேரள அரசு ஏற்க மறுத்தது. காரணம் கேரள அரசின் யானை அரசியல் இது. இந்த யானையை கொண்டு வந்து மேட்டகானத்தில் விட்டு, மேகமலையை கலக்கி பெரும் பிரச்னையாகி விட்டது.
இவ்வளவு வலுவான வனத்துறையால், யானையை முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் விட்டு, அதற்கு முறையான உணவு முறை பயிற்சி கொடுத்து, அரிசி, ஜீனி உணவை மறக்கடித்து விட்டாலே இந்த பிரச்னை தீர்ந்து விடும். அதன் பின்னர் பரம்பிக்குளம், ஆழியாறு வனப்பகுதிக்குள் விட்டு விட்டால் எந்த பிரச்னையும் இருக்காது. காரணம் அது மிகவும் அடர்ந்த வனப்பகுதி. இப்போதும் கேரளாவில் உள்ள மதிகெட்டான்சோலை நேஷனல் பார்க்கில் பல நுாறு யானைகள் உள்ளன. அத்தனை யானைகள் இருந்தம் அங்கு எந்த பிரச்னையும் இல்லை. அரிசிக்கொம்பனின் உணவுப்பழக்கத்தை மாற்றாதவரை பிரச்னை தீராது. இதற்கு வனத்துறை மிகவும் பெரிய அளவில் ரிஸ்க் எடுக்க வேண்டும். ஒரு யானையை இப்போது உள்ள சூழலில் பாதுகாக்க முடியவில்லை என கேரள வனத்துறை கூறுவது மிகவும் அபத்தம். இவ்வாறு கூறினார்.