ஆதார் அட்டை இணைக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கமா ?
Voter ID Card Link Aadhaar Card -ஆதார் அட்டையினை தங்களது வாக்காளர் அட்டையுடன் இணைக்காதவர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்தே நீக்கப்படுமென கூறப்படுகிறது
HIGHLIGHTS
Voter ID Card Link Aadhaar Card -நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடக்கிறது. ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க வேண்டியது கட்டாயம் இல்லை என்ற தகவல்கள் பரவி வருவதை தேர்தல் பிரிவு அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஒவ்வொரு குடிமகனும் தங்களது ஆதார் எண்ணை, தன்னுடைய வாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்பதில் கண்டிப்புடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்னர் அத்தனை வாக்காளர்களிடமும் ஆதார் நம்பர் வாங்கி இணைக்கும் பணிகள் நடந்தன. இந்நிலையில் இந்த பணிகள் நிறைவடையாமலேயே முடிவுக்கு வந்து விட்டது. இப்போது கடந்த சில மாதங்களாக இந்த பணிகள் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளன.
இந்த மாதம் இரண்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதாவது நான்கு நாட்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் நீக்கல் பணிகள் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தான் முக்கிய பணியாக இருக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: போட்டோ வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கப்பட்ட பின்னரும், இரட்டை பதிவு, மூன்று பதிவுகள் கொண்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் அரசு பணியாளர்களே முதலிடம் பிடிக்கின்றனர். இவர்கள் தங்களது சொந்த ஊரில் உள்ள வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.
பணிபுரியும் ஊரிலும் வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.அடுத்து அரசியல் பிரமுகர்கள் இரட்டை பதிவில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் தங்கள் கட்சியினரையே கிராமத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியிலும், நகர் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியிலும் சேர்த்துள்ளனர். அடுத்து மேல் தட்டு மக்கள், நடுத்தர வர்க்கத்தின் முதல் தட்டு மக்கள் அதிகளவில் இரட்டை பதிவு வாக்காளர்களாக உள்ளனர்.
சில மாதங்களாக வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தேர்தல் பிரிவு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று ஆதார் அட்டை வாங்கி அவர்களின் வாக்காளர் அட்டையுடன் இணைத்து வருகின்றனர். இந்த இணைப்பு பணிகளை மொபைல் போனிலேயே செய்து முடிக்க தேர்தல் பிரிவு பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
பலர் எந்த வித தயக்கமும் இன்றி தங்களது ஆதார் அட்டை நகலை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க கொடுத்து விட்டனர். பலர் பெரும் தயக்கம் காட்டுகின்றனர். சிலர் தர முடியாது என பிடிவாதம் பிடிக்கின்றனர். இப்படி முரண்பாடு செய்பவர்களின் பட்டியல் தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களது வீட்டிற்கு தேர்தல் பிரிவு பணியாளர்கள் ஒரிருமுறை நேரில் சென்று கேட்க அறிவுறுத்தி உள்ளோம். அப்போதும் தர மறுத்தால், அவர்களை பட்டியலில் இருந்து அகற்றி, 'ஷிப்ட்' செய்ய வேண்டியவர்கள் என்ற பட்டியலில் சேர்த்து விடுவோம்.
இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள், ஆதார் அட்டை நகலை தராமல் ஓட்டளிப்பது சிரமம் ஆகி விடும். பட்டியலில் இருந்து நீக்க மாட்டோம். ஆனால் ஓட்டளிக்க முடியாத அளவுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனை அறிந்து தேர்தல் பணியாளர்களுடன் தகராறு செய்தால், அவர்கள் மீது போலீசில் புகார் கொடுக்குமாறு தேர்தல் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்தால் ஜாமீனில் வெளிவருவது கூட சிரமம் ஆகி விடும். எனவே தேர்தல் பிரிவு பணியாளர்களுடன் அவர்கள் எந்த தகராறும் வைத்துக் கொள்ளக்கூடாது.
மத்திய, மாநில தேர்தல் பிரிவு தலைமை நிர்வாகம் என்ன அறிவுரை வழங்கி உள்ளதோ அதனை தான் மாவட்ட அளவிலும், கிராம அளவிலும் பணியாளர்கள் செயல்படுத்தி வருகின்றனர். எந்த ஒரு தனி நபரையும் குறித்து வைத்து பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் யாரும் செயல்படவில்லை. எனவே இதில் முரண்பாடு பிடிக்காமல் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து, ஆதார் அட்டை நகலை வழங்கி, தங்கள் வாக்காளர் அட்டையுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். இந்த பணிகள் நிறைவடையும் போது, மாநிலம் முழுவதும் மட்டுமல்ல. நாடு முழுவதும் இரட்டை பதிவு வாக்காளர்கள் இருக்க வாய்ப்புகள் இருக்காது. அவர்கள் ஏதாவது ஒரு இடத்தில் தான் ஓட்டளிக்க முடியும். அது எந்த இடம் என்பதை வாக்காளர்களே முடிவு செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறினர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2