ரயில் இன்ஜினை மலர் தூவி வரவேற்ற பொதுமக்கள்
பத்து ஆண்டுகளுக்கு பிறகு தேனிக்கு வந்த ரயில் இஞ்ஜினுக்கு பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.
மதுரை - போடிநாயக்கனூர் மீட்டர்கேஜ் ரயில் பாதை அகற்றப்பட்டு 450 கோடி ரூபாய் செலவில் அகல ரயில்பாதை திட்டப்பணிகள் துவக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த பத்து ஆண்டுகளாக அகல ரயில் பாதை திட்டப்பணிகள் மந்தமாக நடைபெற்று வந்தது. 92 கிமீ தொலைவு உள்ள இந்த அகல இரயில் பாதை பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலம் கட்டும் பணி, தண்டவாளங்கள் அமைக்கும் பணி என வேகமாக நடைபெற்றது. முதற்கட்டமாக 37 கிமீ தொலைவு உள்ள மதுரை - உசிலம்பட்டி வரையிலான சோதனை ரயில் ஓட்டம் நடத்தப்பட்டது.
தற்போது தேனி வரை பணிகள் முழுமையாக முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது மதுரையில் இருந்து தேனி வரை ரயில் இன்ஜின் சோதனை முறையில் இயக்கப்பட்டது. மதுரையில் காலையில் புறப்பட்ட ரயில் இன்ஜின் பிற்பகலில் தேனி ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. 10 ஆண்டுகளுக்கு பின்பு ரயில் இன்ஜின் தேனி பகுதிக்கு வந்ததை தொடர்ந்து பொதுமக்கள் மலர்கள் தூவி ஆரவாரத்துடன் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.குன்னூர் வைகை ஆற்றுப் பாலம், அரண்மனைபுதூர் விலக்கு பகுதி, நகர் பகுதி வழியாக 20 கிமீ வேகத்தில் கடந்து சென்ற இரயில் இன்ஜினை வழி நெடுக பொதுமக்கள் ஆரவாரத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.