ஓய்வுபெற்ற போலீசாருக்கும் அரசு சார்பில் இறுதி மரியாதை... வந்தது உத்தரவு
ஓய்வுபெற்ற போலீசாருக்கும் அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்த வேண்டும் என உத்தரவு வந்து உள்ளது.
HIGHLIGHTS
ஆறரை கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் மக்களின் பாதுகாப்பு பணிக்காக சுமார் ஒன்றரை லட்சம் போலீசார் உள்ளனர். இதில் கான்ஸ்டபிள் எனப்படும் இரண்டாம் நிலை காவலர் முதல் டி.ஜி.பி. வரை அடக்கம். தமிழக காவல் துறையின் தலைமை இயக்குனராக (போலீஸ் டி.ஜி.பி) தற்போது சைலேந்திரபாபு இருந்து வருகிறார்.
இவர் தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக பதவி ஏற்ற பின்னர் காவலர் முதல் உயர் அதிகாரிகள் வரை உள்ள அனைத்து நிலையினருக்கும் பல்வேறு சலுகைகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இதற்காக மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து காவலர்களின் நலன் தொடர்பான கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். மேலும் நவீன தகவல் தொழில்நுட்பத்தை காவல் துறை அதிகாரிகள் தெரிந்து கொண்டு அவற்றின் மூலம் பொதுமக்கள் புகார் அளிப்பதற்கான பயிற்சிகளையும் கொடுத்து வருகிறார். அவர் எடுத்து வரும் இந்த நடவடிக்கைகள் காவலர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று உள்ளது.
இந்த நிலையில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு ஒரு சுற்றறிக்கை குறிப்பாணை அனுப்பி உள்ளார்.
அந்த குறிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அனைத்து மாவட்ட , மாநகர காவல் எல்லைக்குட்பட்பட பகுதிகளில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் எவரேனும் இறக்க நேரிட்டால் காவல் துறைக்கு அவர் ஆற்றிய சேவைகளை அங்கீகரிக்கும் வண்ணம் அன்னாரது இறுதி சடங்குகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சீருடையுடன் கலந்து கொண்டு காவல் துறை தலைமை இயக்குனர்/ படைத்தலைவர் சார்பாக மலர் வளையம் வைத்து இறுதி மரியாதைகளை செய்ய வேண்டும்.
மேலும் இந்நிகழ்வை தவறாது கடைபிடிக்க அனைத்து காவல் நிலையங்களிலும் அக்காவல் நிலைய எல்லைக்குள் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பதிவேடு ஒன்று பராமரிக்க அறிவுறுத்தப்பட வேண்டும். இந்த பதிவேடு நிலைய எல்லையில் வாழும் ஓய்வு பெற்ற காவலர்கள் பதிவேடு என பெயரிடப்பட்டு இது பராமரிக்கப்பட வேண்டும்.
இந்த பதிவேடு பராமரிக்கப்படுவதையும், காலம் சென்ற முன்னாள் காவலர்களுக்கு துறை மரியாதை செய்யும் நிகழ்வுகளையும் உயர் காவல் அதிகாரிகள் ஆய்வின்போது சரிபார்த்து உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கை குறிப்பாணையில் கூறப்பட்டு உள்ளது.
தமிழக காவல் துறையில் தற்போது வரை பணியில் உள்ள காவலர்கள் மற்றும் அதிகாரிகள் குற்றவாளிகள் தாக்குதலினால் இறந்தாலோ அல்லது இயற்கை மரணம் அடைந்தாலோ, அல்லது நோயினால் இறந்தாலோ மட்டுமே சம்பந்தப்பட்ட காவல் உயர் அதிகாரிகள் நேரில் சென்று காவல் துறை சார்பில் இறுதி மரியாதை செய்யும் நடைமுறை அமலில் உள்ளது.
போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு தற்போது பிறப்பித்துள்ள இந்த ஆணையின் மூலம் இனி ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் அரசின் சார்பில் இறுதி மரியாதை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.