அமைச்சர் பொன்முடி மகனுக்கு எதிரான வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்
அமைச்சர் பொன்முடி மகனுக்கு எதிரான வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
HIGHLIGHTS
அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்.பி.க்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கு எம்.பி மற்றும்– எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டுகளில், கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது, செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு சுமார் ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012 ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இதன் அடிப்படையில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்களும், 13 லட்ச ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டு உள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.
இந்த சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கை சென்னை எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2வது சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கின் விசாரணை வரும் 11ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.