ஓட்டல் அதிபர் மகளிடம் கத்தி முனையில் தங்க சங்கிலி-ரூ.49 ஆயிரம் பறிப்பு
ஓட்டல் அதிபர் மகளிடம் கத்தியை காட்டி மிரட்டி தங்க சங்கிலி-ரூ.49 ஆயிரம் பறித்து சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் குடியான தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் சோழபுரத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த 14-ந் தேதி இரவு இவருடைய வீட்டுக்குள் நுழைந்த 2 பேர் விஜயகுமாரின் மகள் பிரியங்காவிடம் (28) கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த அரை பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டனர்.
மேலும் விஜயகுமாரிடமும் கத்தியை காட்டி மிரட்டி ரூ.49 ஆயிரத்தை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து பிரியங்கா சோழபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விஜயகுமாரின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தியபோது, ராமானுஜபுரத்தை சேர்ந்த கவியரசன் (24), நடையழகன் (24) ஆகிய 2 பேர் விஜயகுமாரின் வீட்டுக்குள் புகுந்து சங்கிலி மற்றும் பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமானுஜபுரத்தில் பதுங்கி இருந்த கவியரசன், நடையழகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து சங்கிலி மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.