மதுக்கூர் வட்டாரத்தில் விவசாயிகளின் அடிப்படை விபர கணக்கெடுப்பு பணி
விவசாயிகளின் அடிப்படை விபர கணக்கெடுப்பு பணிகள் மதுக்கூர் வட்டாரத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
HIGHLIGHTS
மதுக்கூர் வட்டாரத்தில்லுள்ள 33 ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விக்ரமம் மதுக்கூர் வடக்கு மற்றும் அத்திவெட்டி பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் அத்திவெட்டி ஊராட்சியின் கீழ் வரும் அத்திவெட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளின் அடிப்படை விபரங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அரசினால் வழங்கப்பட்ட படிவத்தை விவசாயிகளுக்கு வழங்கி கணக்கெடுப்பு துவக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அத்திவெட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் மற்றும் அத்திவெட்டி கவுன்சிலர் செந்தில் மற்றும் இயற்கை விவசாயகள் அமைப்பின் முன்னோடி விவசாயி பாலசுப்பிரமணியன் ஆகியோர் செய்து இருந்தனர். அண்ணாதுரை செல்வநாயகம் மற்றும் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொணடு வேளாண்துறை தொடர்பாக தங்களின் தேவைகளை எடுத்துக்கூறினர்.
வேளாண் உதவி இயக்குனர் திலகவதி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் அதற்கான அடிப்படைத் தேவைகள் போன்றவை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட அத்திவெட்டி கிராமம் செயலாக்க குழுவின் தலைவராக ராஜ்குமார் அவர்களும் முன்னோடி விவசாயிகள் மற்றும் குழு பிரதிநிதிகள் செயலாக்க குழுவின் உறுப்பினர்களாகவும் இருப்பதால் தனிப்பட்ட முறையில் விவசாயிகளின் தேவைகள் மற்றும் அத்திவெட்டி கிராமத்துக்கு பொதுவான முறையில் தேவையான கட்டமைப்பு வசதிகள் போன்றவை பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அத்திவெட்டி செயலாக்க குழு தீர்மான பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.
இன்றைய தினம் வேளாண் துறை துணை இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோமதி தங்கம் கலந்துகொண்டு திட்டத்தை செயல்படுத்தும் முறைகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார். மேலும் விதை கிராமத் திட்டத்தின் கீழ் அத்திவெட்டி கிராமத்தைசேர்ந்த 6 விவசாயிகளுக்கு உளுந்து வம்பன் 8 விதைகள் மானியத்தில் வேளாண் துணை இயக்குனரால் வழங்கப்பட்டது.
மேலும் விவசாய அடிப்படை விபரங்கள் குறித்த படிவங்களை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் மாநில திட்ட வேளாண் துணை இயக்குனர், அத்திவெட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி வேளாண் அலுவலர் சாந்தி ஆகியோர் வழங்கினர். வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா ராஜு அய்யா மணி ஆகியோர் விவசாயிகளின் அடிப்படை விபரங்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர். இக்கூட்டத்தில் பங்கு கொள்ள இயலாத விவசாயிகளுக்கான படிவங்கள் அத்திவெட்டி கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீளப் பெறப்பட்ட உள்ளது.
அத்திவெட்டி கிராம விவசாயிகள் காலத்தே தங்கள் அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்து அட்மா திட்ட உதவி அலுவலர் ஐயா மணி அவர்களிடம் நேரடியாக பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தெரிவித்துள்ளார்.