மின்கட்டண உயர்வால் சிறுகுறு தொழில்கள் பாதிப்பு; வேலை இழக்கும் தொழிலாளர்கள்
சிறுகுறு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மின் அளவிற்கு மட்டும் மின் கட்டணத்தை வசூல் செய்து, பிற கட்டண உயர்வினை ரத்து செய்யக் கோரி, சிறுகுறு தொழிற்சாலைகள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண அதிகரிப்பால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள ஏராளமான சிறுகுறு தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான அரிசி ஆலைகள், மர அறுவை ஆலைகள், ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி செய்யும் ஆலைகள், தேங்காய் நார் தயாரிக்கும் ஆலைகள் உட்பட பல்வேறு சிறு குறு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதன் மூலம் தென்காசி மாவட்டத்தில் மட்டும் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை கழித்து வருகின்றனர்.
தற்போது விதிக்கப்பட்ட மின் கட்டண உயர்வால், சிறுகுறு தொழிற்சாலை உரிமையாளர்கள் ஆலைகள் இயக்கும் நேரத்தை குறைத்து வருகின்றனர். இதனால் ஏராளமான தொழிலாளர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். தொழிற்சாலைகள் தொடங்கும் பொழுதே மின் இணைப்புக்கான டெபாசிட் தொகை ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.330, மேலும் மின்கம்பம், அதற்கு தேவையான தொகை, அபராத கட்டணம், டிரான்ஸ்பார்மர் லீக்கேஜ் கட்டணம், மின் கட்டணத்திற்கான ஜிஎஸ்டி என உபயோகிப்பாளரிடம் வசூல் செய்யும் நிலையில் இந்த கட்டண உயர்வு சிறு தொழிலை பாதிப்படைய செய்கிறது என்றும், மத்திய மாநில அரசுகள் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடன் வசதி, மானியம் வழங்கினாலும் அடிப்படை தேவையான மின்சாரத்தின் கட்டண உயர்வினால் தொழில்கள் வளர்ச்சி அடையாது என்று தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பினால் வங்கி கடன் தவணை கட்ட முடியாத நிலை தற்போது தொடர்கிறது எனவும் தெரிவித்துள்ளனர். பரபரப்பான நேரங்களில் ('பீக் ஹவர்ஸ்' எனப்படும் காலை 6 முதல் காலை 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ) பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்குவதில்லை. அதற்கும் கட்டண உயர்வை அறிவித்து அதில் 15% கட்டண குறைப்பு என்பது தொழிற்சாலைகளுக்கு எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளனர்.
எனவே, உபயோகப்படுத்தும் மின் அளவுக்கான கட்டணத்தை தவிர பிற கட்டண உயர்வை நீக்கி சிறு குறு தொழிற்சாலைகளை காப்பாற்ற வேண்டும் என அரசுக்கு தென்காசி மாவட்ட சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.