தென்காசி அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு இடத்தை மீட்ட வட்டாட்சியர்
தென்காசி அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு இடத்தை வட்டாட்சியர் மீட்டு அங்கன்வாடி பணிகளை தொடங்க உத்தரவிட்டார்
தென்காசி மாவட்டம் கங்கனாங்கிணறு பகுதியில் அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு ஊத்துமலை - கங்கனாங்கிணறு சாலை ஓரத்தில் வருவாய்த் துறைக்கு சொந்தமான 5 சென்ட் இடத்தில் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது .
அந்த இடத்தில் இடத்தை அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மற்றும் செல்வக்குமார் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்து ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் அமைத்திருந்தனர். அதனை அகற்ற கூறி வருவாய்த் துறை சார்பில் பல முறை நோட்டீஸ் அனுப்பியும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இதனால் வீகேபுதூர் வட்டாட்சியர் வெங்கடேஷ் தலைமையில் அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஜேசிபி உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
தொடர்ந்து அந்த இடம் சீரமைக்கப்பட்டு விரைவில் அங்கன்வாடி கட்டடம் கட்டப்படும் என தாசில்தார் வெங்கடேஷ் தெரிவித்தார்.