தென்காசியில் போதை மாத்திரை விற்பனை: 4 சிறுவர்கள் மருத்துவமனையில் சீரியஸ்
தென்காசியில் போதை மாத்திரை சாப்பிட்ட 4 சிறுவர்கள் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
HIGHLIGHTS
போதை மாத்திரை உட்கொண்ட 4 சிறுவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி போதை மாத்திரையை விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், தென்காசி நகர பகுதியில் உள்ள வாலிபன் பொத்தை என்கின்ற பகுதியில் வசித்து வரும் 4 சிறுவர்களுக்கு திடீரென உடல் நல குறைபாடு ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் போதை மாத்திரை உட்கொண்டதும், அந்த போதை மாத்திரையால் தான் அவர்களுக்கு உடல் நல குறைபாடு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த 4 சிறுவர்களின் பெற்றோர்கள் உடனே சம்பவம் குறித்து தென்காசி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில், சென்ற தென்காசி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவர்களுக்கு போதை மாத்திரையை கொடுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
அப்பொழுது, தென்காசி பகுதியை சேர்ந்த காசிராஜன் (வயது 40) என்ற நபர் போதை மாத்திரையை வாங்கி சிறுவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும், அந்த நபர் போதை மாத்திரையை முதலில் சிறுவர்களுக்கு இலவசமாக கொடுத்து, அவற்றிற்கு அவர்களை அடிமையாக்கி பின் போதை மாத்திரையை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, காசிராஜனை கைது செய்த போலீசார் வேறு ஏதேனும் சிறுவர்கள் இந்த போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்களா? என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சமீப காலமாக போதை பழக்கத்தால் ஒரு சில உயிரிழப்புகள் நிகழ்ந்து வரும் சூழலில், போதை மாத்திரை சாப்பிட்ட 4 சிறுவர்கள் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.