/* */

அரசு திட்டங்கள் பற்றி மாவட்டந்தோறும் ஆய்வு- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

அரசு திட்டங்கள் பற்றி மாவட்டந்தோறும் ஆய்வு நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

HIGHLIGHTS

அரசு திட்டங்கள் பற்றி மாவட்டந்தோறும் ஆய்வு- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
X

தென்காசியில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

எந்த நோக்கத்திற்காக திட்டங்கள் வகுக்கப்படுகிறதோ அந்த திட்டங்கள் மக்களுக்கு சென்று அடைகிறதா என்பதை அறிய மாவட்ட வாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்த அடுத்த கட்டமாக முடிவு எடுத்துள்ளதாக தென்காசி மாவட்ட அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசினார்.

தென்காசி மாவட்டம் கணக்குப்பிள்ளை வலசையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு 34 அரசு துறைகள் சார்ந்த ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 508 பயனாளிகளுக்கு 182 கோடியே 56 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கான கூடுதல் கட்டிடம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான கட்டிடங்கள் உள்ளிட்ட 34 கோடியே 14 லட்சம் மதிப்பிலான 23 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து 11 துறை சார்ந்த 22 கோடியே 20 லட்சம், 6457 நிறைவுற்ற திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து விழா மேடையில் தமிழக முதலமைச்சர் குற்றால குறவஞ்சி பாடலுடன் பேச்சை தொடங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தென்காசி மாவட்டத்திற்கு வந்தவுடன் குற்றாலம் மண் குளிர்ந்ததை போல் மனமும் குளிர்ந்தது. சென்னை போன்ற வெப்பமாக இருக்கும் இடத்திலிருந்து குற்றாலம் வந்த எனக்கு மிகவும் இதமாக இருக்கிறது. தென்காசி மண்ணின் வீரத்தை உலகறிய செய்த புலித்தேவன், ஒண்டிவீரன் ஆகியோருக்கு மணிமண்டபம் அமைத்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் 41980 பேர் பயனடைந்துள்ளனர். 1071 குடும்பங்களுக்கு வேளாண் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது 150க்கும் மேற்பட்ட கோவில்களில் பணி செய்பவருக்கு மாத ஊக்கத் தொகை ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தென்காசி மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் புளியங்குடி சங்கரன்கோயில் சாலை மேம்படுத்தப்படும். தென்காசியில் புதிய விளையாட்டு தளம் அமைக்கப்படும். பனையூர் கூடலூர் சாலை மேம்படுத்தப்படும்.

சிவகிரி மற்றும் ஆலங்குளம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆலங்குளம் பகுதியில் புதிய வேளாண் வளாகம் அமைக்கப்படும். குழந்தைகளும் என் மீது நம்பிக்கை வைத்து கோரிக்கை கடிதம் அனுப்புகிறார்கள். தென்காசி மாவட்டம் வினை தீர்த்த நாடார் பட்டியைச் சேர்ந்த சிறுமி ஆராதனா பள்ளியில் போதிய கட்டிட வசதி இல்லை என கோரிக்கை வைத்தார். அந்த சிறுமியின் கோரிக்கையும் ஏற்கப்பட்டு 35 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவருடைய தேவையும் ஒவ்வொருவருடைய பிரச்சினையையும் அறிந்து கழக அரசு செயல்படுகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சித் தலைவர் தேர்தல் அறிக்கையில் விடுபட்ட சில வாக்குறுதிகளை மட்டும் வைத்துக்கொண்டு குழம்பிக் கொண்டிருக்கிறார் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் எரிச்சல் வார்த்தைகளுக்கு எல்லாம் பதில் சொல்ல போவதில்லை. எங்களை நம்பி வாக்களித்தவர்களுக்கு உண்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் செயல்பட்டு வருகிறோம். தமிழக மக்கள் இருண்ட காலத்திலிருந்து உதயசூரியன் காலத்திற்கு வந்துவிட்டனர். இந்தியாவில் தமிழக முதல் இடத்திற்கு வரவேண்டும் என்பதையே இலட்சியம் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

சிறு தொழில், ஒடுக்கப்பட்டோர் மேம்பாடு என அனைத்திலும் தமிழக அரசு முதன்மையில் உள்ளது அனைத்து துறைகளிலும் தமிழகம் உயர்ந்து வருகிறது. இதனை மக்களின் மனதின் மூலம் நேரடியாக நான் கண்டு கொண்டிருக்கிறேன். இந்த ஆட்சி தான் தொடர வேண்டும் என மக்கள் ஊக்கமளித்து வருகிறார்கள். திட்டமிடுவது திட்டமிட்டதை செயல்படுத்துவதுதான் நல்லாட்சிக்கு அடையாளம். அதை தான் தினமும் எங்கள் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம். அடுத்த கட்டமாக மாவட்ட வாரியாக வகுக்கப்படும் திட்டங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். எந்த நோக்கத்திற்காக திட்டங்கள் வகுக்கப்படுகிறதோ அந்த நோக்கம் கடைநிலை ஊழியர்கள் வரை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்த முடியும்.

இவ்வாறு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி நாடார், சதன் திருமலை குமார், ராஜா, உட்பட அரசு அதிகாரிகள் , அரசியல் பிரமுகர்கள். பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Dec 2022 11:07 AM GMT

Related News