சங்கரன்கோவில் அருகே தனியார் நூற்பாலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சங்கரன்கோவில் அருகே தனியார் நூற்பாலையில் விருப்ப ஓய்வு,வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை ஆகியவற்றை வழங்கக் கோரி போராட்டம்
HIGHLIGHTS
சங்கரன்கோவில் அருகே தனியார் நூற்பாலையில் விருப்ப ஓய்வு,வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை ஆகியவற்றை வழங்கக் கோரி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையான்குளத்தில் தனியார் நூற்பாலை உள்ளது.இந்த நூற்பாலையில் 1500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர்.இங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு கடந்த 5 வருடங்களாக சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்றும் விருப்ப ஓய்வு,பணிக்கொடை வருங்கால வைப்பு நிதி ஆகியவையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு 300க்கும் மேற்பட்டோர் ஆலையின் உள்ளே அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களுக்கு டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நூற்பாலை நிர்வாகம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று தொழிலாளர்கள் தங்களுக்கு பணிக்கொடை ,வருங்கால வைப்பு நிதி மற்றும் விருப்ப ஓய்வு வழங்க கோரி 50 பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் நூற்பாலையின் நுழைவுவாயிலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாலை 4 மணியளவில் தொடங்கிய உள்ளிருப்பு போராட்டம் நள்ளிரவிலும் நீடித்து வருகிறது. கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது தொழிலாளர்கள் அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.