சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு: தீயணைப்பு துறையினரால் மீட்பு
சங்கரன்கோவில் அருகே 80 அடி ஆழ கிணற்றில் விழுந்து தத்தளித்த பசுமாட்டை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
HIGHLIGHTS
சங்கரன்கோவில் அருகே 80 அடி ஆழ கிணற்றில் விழுந்து தத்தளித்த பசுமாட்டை, தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த அவரது மாடு, அருகே இருந்த கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதுதொடர்பாக தகவலறிந்த சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி பசுமாட்டை கயிறு கட்டி மேலே இழுத்து பத்திரமாக மீட்டனர்.
சங்கரன்கோவில் பகுதியில் உள்ள கிணறுகளில் அதிகளவில் கால்நடை விழுந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. எனவே விவசாயிகள் கால்நடைகளை கிணற்றின் அருகே மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டாமென சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயன் அறிவுறுத்தினார்.