விபத்தில் பெற்றோர் பலி ; ஆதரவற்ற இரு பெண் குழந்தைகளுக்கு, அரசு உதவ கோரிக்கை.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரை சேர்ந்த தம்பதி, டூவீலரில் சென்ற போது கார் மோதிய விபத்தில் உயிரிழந்தனர்.
HIGHLIGHTS
கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியை சார்ந்தவர் மாடசாமி மகன் சசிகுமார் வயது(42) கொத்தனார். இவரது மனைவி அன்னலட்சுமி வயது(32) இவர் வீட்டிலிருந்து பீடி சுற்றும் வேலை செய்தார். இவர்களுக்கு, சீமா (12) அபிநயா (11) என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஞாயிறன்று கணவன், மனைவி இருவரும், தனது குழந்தைகளோடு, அன்னலட்சுமி சொந்த ஊரான திருத்தங்கலுக்கு சென்றனர். குழந்தைகளை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, டூவீலரில் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக, அருப்புக்கோட்டை சென்றனர். நிகழ்ச்சி முடிந்தபின், திருத்தங்கலுக்கு அங்கிருந்து கிளம்பினர்.
அருப்புக்கோட்டை அருகில் உள்ள பொய்யான்குளம் கிழக்கு பாலம் அருகே, அவர்கள் டூவீலரில் வந்தபோது, அதிவேகமாக வந்த கார் டூவீலரில் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், தூக்கி வீசப்பட்ட அன்னலட்சுமி, தலையில் பலத்த காயமடைந்து அதே இடத்தில் உயிரிழந்தார். பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய சசிக்குமார், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெற்றோரை விபத்தில் பறிகொடுத்த நிலையில், ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பில் பயிலும் இரு பெண் குழந்தைகளின் அவல நிலை கண்டு பொதுமக்களும், உறவினர்களும் கலங்கினர். அக்குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்பது, அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.