நாட்டு வெடிகுண்டு வீசி மனைவியை கொல்ல முயன்ற கணவன் கைது
வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடி குண்டை எடுத்து கௌசல்யாவின் மீது வீசியுள்ளார்
HIGHLIGHTS
செங்கோட்டை அருகே மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி.போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வல்லம் பகுதியை சேர்ந்தவர் சந்தனகுமார். இவரது மனைவி கௌசல்யா.இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சந்தனகுமார் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும்போது, மது போதையில் வந்துள்ளார்.அதை பார்த்த அவரது மனைவி கௌசல்யா சந்தனகுமாரை கண்டிக்கவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் பெரிய அளவில் சண்டையாக மாறவே, ஆவேசம் அடைந்த சந்தனகுமார் கையில் கிடைத்ததை வைத்து கௌசல்யாவை தாக்கியுள்ளார்.ஒரு கட்டத்தில் போதை தலையின் உச்சிக்கு ஏறவே, ஆவேசம் அடைந்த சந்தனகுமார் தான் வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து கௌசல்யாவின் மீது வீசியுள்ளார்.
அப்பொழுது, கௌசல்யாவின் தலையில் வெடிகுண்டு வெடித்து கௌசல்யாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகாமையில் இருந்த பொருள்களும் சேதமடைந்தன. வெடிச் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது, கௌசல்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார்.
உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த செங்கோட்டை போலீசார் சந்தனகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சந்தனகுமாருக்கு நாட்டு வெடிகுண்டு எப்படி கிடைத்தது? அவரே தயார் செய்தாரா? இல்லையெனில் வேறு யாரேனும் கொடுத்தார்களா? என்பது குறித்து செங்கோட்டை போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.