கடையம் அருகே மணல் குவாரிகளில் கனிமவளத் துறையினர் ஆய்வு
கடையம் அருகே மணல் குவாரிகளில் கனிமவளத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் குவாரி, கல் குவாரி, எம் சாண்ட் கிரஷர், செங்கல் சூளைகள் என ஏராளமானவை செயல்பட்டு வருகின்றன. இதில் சில குவாரிகள் அனுமதியின்றி செயல்படுதல், அரசின் விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றுதல், திறந்த வெளியில் கொண்டு செல்லுதல் உள்ளிட்டவை அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கையும் விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று கடையம் அருகேயுள்ள வடக்கு மடத்தூர் என்ற கிராமத்தில் செயல்படும் தனியாருக்கு சொந்தமான மணல் குவாரியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கனிம வளத்துறை அதிகாரிகள் குவாரி இயங்குகிறதா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது குவாரி இயக்காதது தெரியவந்துள்ளது. இருப்பினும் மணல் குவிக்கப்பட்டு இருப்பதால் கோட்டாட்சியர் தலைமையில் அதுகுறித்து ஆய்வு நடத்தப்படும் என கனிமவள துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அதே நேரத்தில் மின்சாரத்துறையினரும் அப்போது திடீரென ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.