ஆழ்வார்குறிச்சி அருகே பெண் மரணம்: உறவினர்கள் சாலை மறியல்
ஆழ்வார்குறிச்சி அருகே பெண் மரணம் அடைந்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
ஆழ்வார்குறிச்சி அருகே அருகே பெண் மரணம் உறவினர்கள் சாலை மறியல்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள சிவசைலம் பகுதியை சேர்ந்தவர் இசக்கி பாண்டியன், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மகேந்திரவள்ளி (வயது 37). இவர் அப்பகுதியில் குளத்துக்கு நூறு நாள் வேலைக்கு செல்பவர். இவர்களுக்கு நந்து, விஜி என 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மகேந்திரவள்ளி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவருக்கு மறுநாள் கை, கால் வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அம்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று காலை மகேந்திரவள்ளியின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஆழ்வார்குறிச்சி காவல்துறையினர், மற்றும் வருவாய் துறையினர், உள்பட அதிகாரிகள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடையம் தலைமை மருத்துவர் கூறுகையில் 100% தடுப்பூசியால் இறக்க வாய்ப்பில்லை என கூறி அதன் பயனையும் எடுத்து கூறினார். மேலும் தாசில்தார் அவர்கள் கூறுகையில், முறையாக ஆய்வு செய்து அவர்களின் இரு பெண் குழந்தைகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.