ஆலங்குளம்: மான் வேட்டைக்கு சென்றவர் மின்வேலியில் சிக்கி பலி
ஆலங்குளம் அருகே மான் வேட்டைக்கு சென்றவர் மின்வேலியில் சிக்கி பலியானார்.
HIGHLIGHTS
நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகே மான், முயல் வேட்டைக்கு சென்றவர் மின்வேலியில் சிக்கி பலியானார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் - துத்திகுளம் சாலை மற்றும் மாயமான்குறிச்சி கிராமத்தையொட்டிய வனப்பகுதியில் மான்கள், முயல்கள் ஏராளமாக வசித்து வருகின்றன. இந்நிலையில் துத்திகுளம் சாலை வனப்பகுதியில் விவசாயி பால்ராஜ் என்பவர் தன்னுடைய தோட்டத்தில் மிளகாய் பயிரிட்டுள்ளார். காட்டுப்பன்றி மற்றும் வனவிலங்குளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக மின்வேலி அமைத்துள்ளார்.
நேற்று நள்ளிரவு இந்தப்பகுதியில் மான், முயல் வேட்டைக்காக சுற்றித் திரிந்த கும்பல் விவசாயி பால்ராஜின் தோட்டத்தை கடந்து செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதால் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச்சென்ற போலீஸார் இறந்தவரின் சடலத்தை மீட்டு தென்காசி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மின்சாரம் தாக்கி இறந்த நபர் நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி சேர்ந்த வள்ளிகுமார் என்பதும், இருசக்கர வாகனத்தில் நண்பர்களுடன் மான் மற்றும் முயல் வேட்டைக்காக வந்தபோது மின்வேலியில் சிக்கியதும் தெரியவந்தது. மேலும் அவருடன் வந்தவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.