கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- 2 பேர் பலி
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கனரக வாகனம் உரசியதில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து 2 பேர் பலியானார்கள்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கனரக வாகனம் உரசியதில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து 2 பேர் பலியானார்கள்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த கீழ வெள்ளக்கால் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிமோகன் (29). வல்லம் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (36). இவர்களின் நண்பர்கள் கட்டபொம்மன், மனோஜ்குமார், மதன் ஆகிய 5 பேர் காரில் திருநெல்வேலிக்கு போய்விட்டு நேற்றிரவு 10 மணியளவில் வீடுதிரும்பினர். இதில் முக்கூடலை அடுத்த இடைகால் சர்க்கரை ஆலையில் இருந்து பழுதடைந்த இயந்திரங்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனம் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றது. ஆலங்குளம் பெட்ரோல் பங்க் அருகே வரும்போது, காரின் பக்கவாட்டில் எதிரே வந்த கனரக வாகனத்தில் கொண்டு சென்ற இயந்திரங்கள் உரசியது. இதில், கார் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரின் முன்பகுதி முற்றிலுமாக நொறுங்கியது.
இதில் காரில் இருந்த ஹரிமோகன், சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கட்டபொம்மனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்ற இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் மற்றும் போலீசார் காரில் இருந்தவர்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து கனரக வாகன டிரைவர் மன்னார்குடியை சேர்ந்த மோதிலால் (60) என்பரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.