தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தாண்டாமல் இந்திய கடற்படை பார்த்துக்கொள்ள வேண்டும்
தற்போதுள்ள கொரோனா நோய்தொற்று காலத்தில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதால் இலங்கை அரசுமே பாதிப்படைந்துள்ளது
HIGHLIGHTS
தமிழக மீனவர்கள்இந்திய கடல் எல்லையை தாண்டாமல் இந்திய கடற்படை பார்த்துக்கொண்டால் மீனவர்கள் கைது என்பது இருக்காது என்றார் இலங்கையின் முன்னாள் அமைச்சரும், இலங்கை பிரதமரின் ஆலோசகருமான செந்தில் தொண்டைமான்.
சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த இலங்கையின் முன்னாள் அமைச்சரும், பிரதமரின் ஆலோசகருமான செந்தில்தொண்டைமான் மேலும் கூறியதாவது: இந்திய கடற்படை கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபட்டு, தமிழக மீனவர்கள் எல்லையை தாண்டாமல் பார்த்துக்கொண்டால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தவிர்க்கலாம். அத்துடன் நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்னை ஒரே நாளில் தீர்க்கப்பட்டு விடும். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதால் கூடிய விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.
தற்போதுள்ள கொரோனா நோய்தொற்று காலத்தில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதால் இலங்கை அரசுமே பாதிப்படைந்துள்ளது. .தமிழக மீனவர்கள் கைது குறித்து, கடற்படை மற்றும் மீன் துறை அமைச்சர்கள் கூடிய விரைவில் இலங்கை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். அதன் பின் சிறு அபராதம் விதித்து தமிழக மீனவர்கள் நிச்சமாக விடுவிக்கப்படுவர். அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளை விட இலங்கைக்கும், இந்தியாவிற்கும் கடந்த காலங்களைப்போல்,இன்றுவரை கலாசார, மொழி ரீதியிலான தொடர் நட்பு இருந்து வருகிறது என்றார் செந்தில்தொண்டைமான்.