சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவில் ஆடி மாத சிறப்பு யாகம்
சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவில் ஆடி மாத சிறப்பு யாகம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற, அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு, சிறப்பு யாக பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
இக்கோவிலில், தமிழ் மாத முதல் ஐந்து நாட்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆடிமாத பிறப்பையொட்டி, யாக வழிபாடுகள் நடைபெற்றன. கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கோவில் மண்டபத்தில் அமைக்கப்பட்ட யாக குண்டத்தில், புனிதநீர் அடங்கிய கலசங்களை வைத்து, கணபதி பூஜையுடன் யாக சாலை பூஜைகள் துவங்கியது.
தொடர்ந்து, பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டு ,யாககுண்டத்தில் பட்டு வஸ்திரங்கள், மகா பூர்ணாஹூதி சமர்ப்பிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டன. பின்னர், கலசத்திற்கு உதிரிபூக்கள் கொண்டு அர்ச்சனை செய்யப்பட்டு ,கற்பூர ஆராதனையுடன் , கடம் புறப்பாடு நடைபெற்றது. மூலவர் ஸ்ரீ ஐயப்ப சுவாமி உற்சவர் சுவாமிக்கும் வேத மந்திரங்கள் முழங்க, கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனையடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டன. இதில், கொரோனா தடுப்பு வழிமுறைகளைப்பின்பற்றி பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.