வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாவட்ட சிவகங்கை ஆட்சித்தலைவர் ஆய்வு
சிவகங்கை மாவட்டத்தில் 38 இடங்களுக்கு ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்கு எண்ணிக்கை மையங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் 38 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன்ரெட்டி, சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு சென்று ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்.
அப்பொழுது ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் வாக்குப்பதிவு பெட்டிகள் வைக்கப்படுவதற்கான அறையின் பாதுகாப்புத்தன்மை, வாக்கு எண்ணும் அறை , வேட்பாளர்கள், முகவர்கள் அமருவதற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளின் பாதுகாப்புத்தன்மை குறித்தும் ஆய்வு செய்தார். வாக்கு எண்ணிக்கை நாளன்று எவ்வித இடையூறும் இன்றி வாக்கு எண்ணும் பணியை முடிக்கும் வகையில் திட்டமிட்டு சரியாக மேற்கொள்ள வேண்டும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொறுப்பு) வானதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.லோகன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.