சிவகங்கை மாவட்டத்தில் சாதிச்சான்றிதழ் வழங்குவதில்அலைக்கழிப்பு:ஆட்சியரிடம் புகார்
எங்கள் சமூகத்தினர் கல்வி அறிவு பெறுவதற்கும் , அரசு சலுகை பெறுவதற்கும் தாமதமின்றி சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்.
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்டத்தில் சாதிச் சான்றிதழ் வழங்குவதில் அலைக்கழிப்பு செய்வதாக மாவட்ட வீர சைவப் பேரவையினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூறியுள்ளனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம், மாவட்ட வீர சைவப் பேரவையின் சார்பில், நிர்வாகிகள் மாவட்ட தலைவர் செல்லத்துரை , செயலாளர் ஆறுமுகம் , பொருளாளர் ராமகிருஷ்ணன் , அலுவலக தொடர்பாளர் காளிமுத்து உள்ப்பட நிர்வாகிகள் அனைவரும் வந்திருந்து கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.
அந்த மனுவில், அவர்கள் கூறியிருந்ததாவது: சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 40- ஆயிரம் ஆண்டிப்பண்டாரம் சமூகத்தினர் வாழ்ந்து வருகிறோம். எங்களின் பாரம்பரிய தொழில் கோவில்களில் பூசாரியாக வேலை பார்ப்பது ஆகும் . சிலர் கோவிலைச் சார்ந்து பூக்கட்டும் தொழிலை செய்து வருகிறோம் . இன்னும் சிலர் விவசாயத் தொழிலையும் செய்து வருகிறோம் .
எங்களுக்கு அரசு சலுகையில் ஆண்டிப்பண்டாரம் என்ற சமூகத்தின் அடிப்படையில் சலுகைகளை பெற்று குழந்தைகளை படிக்க வைத்து வருகிறோம். இந்த சமூகம் தமிழக அரசு கெஜட்டில் 2- வது இடத்திலும் , இந்திய அளவில் 4-வது இடத்திலும் இருக்கிறது.
இருப்பினும் சிவகங்கை மாவட்டத்தில் எங்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதில் அரசு அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்து வருகிறார்கள் , மேலும் சில அதிகாரிகள் சாதிப் பெயரைச் சொல்லி கேலியும் செய்கிறார்கள் . எனவே எங்கள் சமூகத்தினர் கல்வி அறிவு பெறுவதற்கும் , அரசு சலுகை பெறுவதற்கும் தாமதமின்றி சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.