தமிழகம் முழுவதும் ஜன.21ம் தேதி கள் இறக்கும் அறப்போராட்டம்
தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டத்தை ஜனவரி 21ஆம் தேதி முதல் நடத்த உள்ளதாக நல்லசாமி அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, கள் போதை பொருள் என்று யார் நிரூபித்தாலும் 10 கோடி ரூபாய் பரிசு என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனை விளம்பரப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான காலண்டர்கள் அறிமுகம் செய்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 17 ஆண்டுகளாக தமிழகத்தில் கள் அனுமதிக்க வேண்டும் என்று பலதரப்பட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். இதற்கு இதுவரை வந்த எந்த அரசும் செவி சாய்க்காத நிலையில் இறுதி போராட்டமாக அரசியலமைப்பு சட்டப்படி, கள் இறக்கி அதை சந்தைப்படுத்தும் அறப்போராட்டத்தை ஜனவரி 21 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடத்தி அரசுக்கு நெருக்கடி தர உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் கள் இறக்க அனுமதி அளிக்காவிட்டால் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் வாக்குகளை மாற்றி அளிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார். இந்த போராட்டத்தில் 50 லட்சம் விவசாய குடும்பங்களும், 10 லட்சம் பனை விவசாய குடும்பங்களும் பங்கேற்கும் என்று கூறினார். மேலும் 8 கோடி மக்கள் நுகர்வோராக உள்ளதால் வாக்குகளை மாற்றி அளிக்க வாய்ப்பு உள்ளது என்பதை அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.