உரிய ஆவணமின்றி ரயிலில் கொண்டுவரப்பட்ட ரூ.11 லட்சம் பணம், தங்க நகைகள் பறிமுதல்
சேலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரயிலில் கொண்டுவரப்பட்ட 11 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
ரயில்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் (22637) ரயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர் அணில் குமார் ரெட்டி காவலர்கள் மாரிமுத்து அணில் சிவசக்தி ஆகியோர் இன்டர்சிட்டி ரயில் சோதனை நடத்தினர்.
அப்போது ரயில் கருப்பூர் அருகே வந்து கொண்டிருந்தது. ரயில் பெட்டியில் சோதனை செய்தபோது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நபரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
இதனையடுத்து அவர் வைத்திருந்த கை பேக் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் திறந்து சோதனை நடத்தினர். அதில் இருபத்தி ஆறு பாலித்தீன் பைகளில் சரியான ஆவணங்கள் இல்லாமல் 11 லட்சத்து 61 ஆயிரத்து 430 ரூபாய் பணம் இருந்தது. மேலும் அந்த பையில் 280 கிராம் தங்க ஆபரணங்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.44 லட்சம் ஆகும்.
இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது சரியான ஆவணங்கள் ஏதும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணை செய்ததில் இதனைக் கொண்டு வந்தவர் கோவை களம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வர மூர்த்தி(27) என்பது தெரியவந்தது.
மேலும் இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ 11,61,430 பணம் மற்றும் 44 லட்சம் மதிப்பிலான தங்க ஆபரணங்களையும் பறிமுதல் செய்து சேலம் வருமானவரி அதிகாரியிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒப்படைத்தனர். இதனையடுத்து வருமான வரி துறை அதிகாரிகள் விக்னேஸ்வர மூர்த்தியுடன் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.