/* */

திருக்குறள் முற்றோதும் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவியர்களிடமிருந்து திருக்குறள் முற்றோதும் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

HIGHLIGHTS

திருக்குறள் முற்றோதும் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
X

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவியர்களிடமிருந்து திருக்குறள் முற்றோதும் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:

இலக்கியங்கள் அனைத்திலும் சிறந்ததும் உன்னதமானதும் மனித குல் அனைத்திற்குமாக உதித்த மேலானதும் ஆகிய தன்னிகரற்ற படைப்பு திருக்குறள். அத்தகைய சிறப்புமிக்க திருக்குறட்பாக்களை மாணவர்கள் இளம் வயதிலேயே மனனம் செய்தால் அவை பசுமரத்தாணிபோல் பதிந்து, நெஞ்சில் நிலைத்து அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும். தாம் பெறுகின்ற கல்வியறிவோடு, நல்லொழுக்கம் மிக்கவர்களாக மாணவர்கள் உருவாக வழிவகுக்கும். எனவே, 1330 திருக்குறட்பாக்களையும் முற்றோதல் செய்யும் மாணவச் செல்வவங்களுக்கு தலா ரூ.10,000/-ம் பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப்பெறுகின்றனர்.

திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுக்கு கலந்து கொள்ளும் மாணவர்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதிபெற்றவர்கள் தெரிவுசெய்யப்பெற்று, பரிசு பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரை செய்யப்பெறுகிறார்கள். திறனாய்வு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்திலுள்ள மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துறையினரால் நடத்தப்பெறும்.

திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு பெறுவதற்கு 1330 திருக்குறட்பாக்களையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். இயல் எண், பெயர், அதிகாரம் எண், பெயர், குறள் எண், பெயர் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளைக் கூறும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், திருவள்ளுவரின் சிறப்புப்பெயர்கள், திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்றை அறிந்தவராக இருத்தல் வேண்டும்.

சேலம் வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் பயில்பவராக இருத்தல் வேண்டும். அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பதின்மப் பள்ளிகள் போன்ற பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கு பெறலாம். தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறும் இப்பரிசினை ஏற்கனவே பெற்றவராக இருத்தல் கூடாது. திருக்குறளின் பொருளும் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாகக் கருதப்பெறும்.

மேற்குறிப்பிட்டவாறு திருக்குறள் முற்றோதும் திறன்படைத்த மாணவர்கள் தமிழ் வளர்ச்சி துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைதள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து நிறைவுசெய்யப்பெற்ற விண்ணப்பங்களை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ அளிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 0427 2417741 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Updated On: 18 Nov 2022 6:45 AM GMT

Related News