/* */

திருப்பூர் அருகே சானிடைசர் பாட்டிலில் கள்ளச்சாராயம் விற்பனை - 1,750 லிட்டர் சாராயம் பறிமுதல்; ஏழு பேர் கைது

திருப்பூரை அடுத்துள்ள ஊத்துக்குளி பகுதியில், சானிடைசர் பாட்டில்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த 7 பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1,750 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பூர் அருகே சானிடைசர் பாட்டிலில் கள்ளச்சாராயம் விற்பனை - 1,750 லிட்டர் சாராயம் பறிமுதல்; ஏழு பேர் கைது
X

கள்ளச்சாராயம் நிரப்ப வைக்கப்பட்டிருந்த சிறிய ரக ‘சானிடைசர்’ பாட்டில்கள்.

ஊத்துக்குளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நூதன முறையில் சானிடைசர் பாட்டிலில் கள்ளச்சாராயம் விற்பனை நடப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து முத்தம்பாளையம் கிராமம் முன்டூர் கவலை தோட்டம் பகுதியில் ஊத்துக்குளி போலீசார் மற்றும் தாராபுரம் மதுவிலக்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

நூதன முறையில் சாராயம் விற்பனையில் ஈடுபட்ட குணசேகரன் , விஜய் , விக்னேஷ் , சதீஷ் , ஜெயராஜ் , சுலைமான் மற்றும் மனோஜ் ஆகிய ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1750 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் விற்பனைக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் மற்றும் இரண்டு சொகுசு கார்கள் மற்றும் பாட்டிலில் அடைத்து விற்பனைக்காக வைத்திருந்த சிறிய பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கள்ளச்சாராய விற்பனை குறித்து, தாராபுரம் மதுவிலக்கு பிரிவில் வழக்கு பதிவு செய்து, 7 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நூதன முறையில் சாராயத்தை சானிடைசர் பாட்டிலில் அடைத்து யாருக்கும் சந்தேகம் வராத வகையில் விற்பனை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு கண் விழிக்குமா?

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை அவ்வப்போது மது விலக்கு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்கின்றனர். தாராபுரம், காங்கயம், ஊத்துக்குளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளவேல மரங்கள் அதிகளவில் இருப்பதால் அதன் பட்டைகளை உரித்து சாராயம் காய்ச்ச ஊறல் போடுவதும் நடக்கிறது.

டாஸ்மாக் மதுக்கடைகள், மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது; தவிர, மதுபான வகைகளின் விலையும் முன்பை விட பலமடங்கு அதிகரித்து உள்ளது. கிராமப்புற பகுதிகளில், டாஸ்மாக் மதுக்கடைகளை தேடி செல்ல வேண்டிய நிலையும் உள்ளதால், போக்குவரத்து சிரமங்களும் 'குடி' மகன்களுக்கு ஏற்படுகிறது. கடை திறக்கப்படாத நேரங்களில், 'பிளாக்'கில் கிடைக்கும் மதுபான பாட்டில் விலை, இரட்டிப்பாக உள்ளதும், 'குடி'மகன்களை சிரமப்படுத்துகிறது.

இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, 24மணி நேரமும் 'குடி' மகன்களுக்கு தட்டுப்பாடின்றி சரக்கு கிடைக்கும் வகையில், குறிப்பிட்ட விலையில், சரக்கை சப்ளை செய்யவும், கள்ளச்சாராய விற்பனை ஜோராக நடக்கிறது. விலை குறைவு, 24 மணி நேரமும் சரக்கு கிடைப்பதால், பெரும்பாலும் இதுபற்றிய புகார்கள் வெளிவருவதில்லை. கைது செய்யப்படும் கள்ளச்சாராய உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் சிறை சென்றாலும், மீண்டும் அதே தொழிலில் ஈடுபடுகின்றனர். இடங்களை மாற்றிக்கொள்ளும் அவர்கள், வியாபாரத்தை மீண்டும் மீண்டும் தொடரவே செய்கின்றனர்.

போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில், சானிடைசர் போன்று கள்ளச்சாராயத்தை சிறிய பாட்டிலில் அடைத்து விற்றது குறிப்பிடதக்கது. இதுபோன்ற நுாதன முறைகளை கையாளும்போது, விரைவில் இந்த குற்றங்களில் ஈடுபடுவோர், பிடிபடாமல் தப்பித்து விடுகின்றனர். மேலும், கள்ளச்சாராய உயிர்பலிகள் ஏற்படும் ஆபத்தும் உள்ளது.


எனவே, கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மற்றும் கள்ளச்சாராய வியாபாரிகளை கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்து, தண்டனைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும். 'போக்சோ' சட்டத்தில் அவர்களை கைது செய்வதோடு, அவர்களது சொத்துகளை முடக்கலாம். கள்ளச்சாராயம் மட்டுமின்றி, கஞ்சா உள்பட போதைப்பொருள் விற்பனையாளர்களை கடுமையாக தண்டிக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதே வேளையில், இதுபோன்ற சமூக குற்றச்செயல்களுக்கு உடந்தையாக போலீசார், அரசியல்வாதிகள் யாரேனும் இருக்கும்பட்சத்தில், அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதும் மிக முக்கியம்.

கள்ளச்சாராயம் காய்ச்சும்போது, அந்த வேலையில் ஈடுபடுவோர் பெரும்பாலும் போதையில்தான் இருப்பது வழக்கம். போலீசாருக்கு தெரியாமல், நள்ளிரவு நேரங்களில் இருட்டான பகுதிகளில், மக்கள் நடமாற்ற இடங்களில், கள்ளச்சாராயம் காய்ச்சும்போது, அதில் போதைக்காக சேர்க்கப்படும் பொருட்கள் அதிகமாகி விட்டாலோ அல்லது, பல்லி, பாம்புகள் போன்றவை ஊறல் பானைகளுக்குள் விழுந்து விட்டாலோ, கள்ளச்சாராயம் விஷ சாராயமாக மாறிவிடும்.

அது வியாபாரிகளுக்கே தெரியாமல் விற்பனைக்கு வரும்போது, விஷ சாராயத்தை குடிக்கும் 'குடி'மகன்கள், போதையின் காரணமாக விஷத்தின் தன்மையை, அதன் பாதிப்புகளை மிக தாமதமாகவே உணருவர். இன்னும் சிலர், விஷத்தன்மைையை போதை என தவறாக எண்ணிக்கொண்டு, உயிரிழக்கும் வரை, தாங்கள் அருந்தியது விஷ சாராயம் என்பதை உணராமலேயே 'சென்று' விடுவர். கண்பார்வை இழத்தல், உடல் உறுப்புகள் செயல் இழத்தல், மரணம் போன்ற கொடூர பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

எனவேதான், கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில், மதுவிலக்கு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுதல், மதுபான விற்பனை ஆகியவற்றை ஒழிக்கும் விதமாக, '10581' எனும், கட்டணமில்லா தொலைபேசி எண்ணை, தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.இந்த எண்ணில் அழைத்து, சட்டவிரோதமான மதுபானங்கள் தயாரிப்பது, விற்பது குறித்த தகவல்கள் இருந்தால், பொதுமக்கள் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் பெயர், எக்காரணம் கொண்டும் வெளியிடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமையகம் மூலம், இந்த கட்டணமில்லா தொலைபேசி எண் நிர்வகிக்கப்படுகிறது. இந்த எண்ணுக்கு வரும் புகார்கள் குறித்து, அந்தந்த மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு உடனுக்குடன் தகவல் அனுப்பப்படும். புகார் தெரிவித்தவர்கள் குறித்து, எந்த தகவலும் வெளியிடப்பட மாட்டாது. புகார் குறித்து எடுத்த நடவடிக்கைகள் குறித்து, உடனுக்குடன் மாவட்ட போலீஸ் நிர்வாகம், தலைமையகத்துக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, திருப்பூர் மாவட்டத்தில் எங்கு கள்ளச்சாராயம் விற்பனை நடப்பதாக தெரிந்தாலும், இந்த கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

Updated On: 23 Sep 2022 1:51 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்