அனுமதியின்றி இயக்கும் விசைத்தறிப் பட்டு நெசவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இராணிப்பேட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி இயக்கும் விசைத்தறிப் பட்டு நெசவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டரிடம் மனு
HIGHLIGHTS
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாப்பேட்டை, சோளிங்கர், ஆற்காடு, திமிரி போன்ற இடங்களில் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் குடும்பத்துடன் பட்டு புடவை, பட்டுத்துணி நெசவு செய்யும் கைத்தறி நெசவாளர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பலர் கைத்தறி பட்டு நெசவு என்று கூறி சிலர் அனுமதியின்றி சட்டவிரோதமாக மின்னணு விசைத்தறி இயந்திரங்கள் மூலமாக பட்டு புடவை மற்றும் துணிகளை நெய்து, குறைந்த விலைகளில் வியாபாரிகளுக்கு சப்ளை செய்து வருவதாக கூறுகின்றனர். அவற்றை வியாபாரிகள் கைத்தறிப் பட்டு துணிகள் என்று பொதுமக்களிடம் ஏமாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்துவருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் பாரம்பரியமான கைத்தறிப் பட்டுத் துணிகள் தரத்துடன் இருந்தாலும் அவற்றை வியாபாரிகள் விசைத்தறியில் உற்பத்தி செய்யும் பட்டுத் துணிகளுக்கு ஈடாக விலையைக் குறைத்து கைத்தறி நெசவாளர்களிடம் வாங்கி வருகின்றனர் ..
கைத்தறிப் பட்டுபுடவை மற்றும் துணிகள் முழுமையான சுத்தமானஅசல் பட்டு இழைகளாலும் சுத்தமான வெள்ளி இழைகளில் தங்க முலாம்பூசப்பட்டு மிதமான விசைவேகத்தில் நூல்இழைகள் அறுபடாமல் சேதமின்றி தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால்,விசைத்தறிகளில் பட்டு இழைகள் அறுபடாமல் இருக்க அவற்றுடன் பாலிஸ்டர் இழைகளை இணைத்தும் சரிகைகளில் அலுமினியம்,செம்பு போன்ற இழைகளில் முலாம்பூசிய கலப்பபடம் செய்யப்பட்ட பட்டு நூல்களில் தயாரிக்கப்படுகிறது. அவை வியாபாரிகளின் அதிக லாபநோக்கால் சுத்தமான பட்டு என்று பொது மக்களை ஏமாற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கைத்தறி பட்டு உற்பத்திகள் வாங்க ஆளின்றி விலைப்போகாமல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு அழிந்து வருவதாக கைத்தறி நெசவாளர்கள் கூறுகின்றனர்.
இதனால் பட்டு நெசவு செய்யும் கைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து நலிவடைந்து வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். எனவே மின்னணு விசைத்தறி பட்டு நெசவைத்தடை செய்யக்கோரி ஏற்கனவே கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தியிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரிடம் பட்டுத்துணி கைத்தறி நெசவாளர்கள் பட்டு விசைத்தறிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்
மேலும், கடைகளில் விற்பனையாகும் பட்டுத்துணிகளில் உள்ள பட்டுமற்றும் சரிகைகளின் உண்மைத்தன்மையை கண்டறியும் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்களை ஏமாற்றி வரும் வியாபாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்க கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.