பொன்னை, பாலாற்றில்100 தடுப்பு அணைகள்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி
பொன்னை ஆற்றங்கரையோர கிராமங்களில் ஏற்பட்டுள்ள மழைவெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டத்தில் பொன்னை யாற்றங்கரையோர கிராமங்களில் ஏற்பட்டுள்ள மழைவெள்ள பாதிப்புகளை அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி பார்வையிட்டனர். ராணிப்பேட்டை, மாவட்டம் பொன்னையாறு, பாலாற்றில் 100 தடுப்பணைகள் கட்டப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
கன மழையினால், ராணிப்பேட்டை மாவட்டம், பொன்னையாறு கரையோர கிராமங்களான சீக்கராஜபுரம் , ஏகாம்பரநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது மற்றும் மேல்பாடி தரைப்பாலம் உடைந்து 30 கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. அவற்றை, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில் முறைகேடாக தரைப்பாலங்கள் கட்டப்பட்டதால், வெள்ளத்தை தாக்கு பிடிக்க முடியாமல் உடைந்துள்ளன. தண்ணீர் குறைந்த பிறகு தான், தரைப்பாலம், குளம் சேதமடைந்தது குறித்து கணக்கெடுத்து சீரமைக்கப்படும்.
இவ்வளவு மழை வரும் என்று நானும் நினைக்கவில்லை, நீங்களும் நினைக்கவில்லை. விரைவில் பொன்னையாறு, பாலாற்றில் 100 தடுப்பணைகள் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.