அரக்கோணத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரக்கோணம் நகராட்சிஅலுவலகம் முன்பாக அமர்ந்து தூய்மைப் பணியாளர்கள் முறையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகராட்சியில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 300க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளரகள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படவேண்டிய சம்பளம் முறையாக வழங்கப்படுவதில்லை. மற்றும் பணியின்போது ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை, உட்பட பல புகார்கள் இருந்து வருகின்றது . இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில், மாதம் தோறும் முறையாக சம்பளம் வழங்கவும், பிடித்தம் செய்யப்படும் பி.எப். மற்றும் இன்சூரன்ஸ் பிடித்தங்களை கணக்கில் செலுத்த வேண்டும் என்றும், வேலையின் போது நிரந்தர தூய்மைப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் என்ற பாரபட்சம் பாராமல் அனைவருக்கும் பணியின் போது தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் எனவும், நகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்களை கோட்டங்களுக்கு இடையே பணியிட மாற்றம் செய்து உத்தரவு வழங்கிய அதிகாரிகளைக் கண்டித்தும் நகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு தூய்மைப்பணியாளர்கள், தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது அவர்களுடன் நகராட்சி மேலாளர் கோபிநாத் ,பேச்சு வார்த்தை நடத்தினார் . இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். அதன் பேரில், ,ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.