வீட்டில் பதுக்கிய 75 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75 லட்ச ரூபாய் மதிப்பிலான 4 டன் குட்கா பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த புது கேசவரம் அருகிலுள்ள மாரி மங்கலம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து குட்கா கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபடும் போது அந்த வீட்டிலிருந்து குட்காவை லோடு வேனில் ஏற்றும் போது கையும் களவுமாக போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
இதில் வீட்டில் இருந்த 75 அட்டை பெட்டிகள் கொண்ட குட்கா மற்றும் ஆறு வகையான பான் மசாலாக்கள் அடங்கிய 70 மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்து ஓட்டுநர் ரமேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 75 லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிவிக்கின்றனர்.