இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கரை பகுதியில் கடல் உள்வாங்கியதால் மக்கள் அச்சம்
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் மற்றும் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் வழக்கத்தை விட கடல் உள்வாங்கியதால் பரபரப்பு
HIGHLIGHTS
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் மற்றும் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் வழக்கத்தைவிட கடல் உள்வாங்கியது.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இன்று காலை முதல் கடல் வழக்கத்திற்கு மாறாக 10 மீட்டர் தூரம் வரை கடல் உள்ளவாங்கியுள்ளது. இதனால் கடற்கரை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் தரை தட்டி உள்ளன. இதேபோல் இராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம், சங்குமால் கடற்கரை பகுதியில் கடல் உள்வாங்கியுள்ளது. அப்பகுதிகளில் கடல் உள்வாங்கியுள்ளதால் கடற்கரை ஓரம் உள்ள பவளப் பாறைகள் மற்றும் கடற்கரையோரங்களில் வசிக்கக்கூடிய கடல்வாழ் உயிரினங்களான நட்சத்திர மீன், சிப்பி, சங்கு உள்ளிட்டவைகள் வெளியே தெரிந்து வருகிறது.
இது வழக்கமான ஒன்று எனவும் பகல் நேரத்தில் நீரோட்டம் மாறியவுடன் கடல் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் அப்போது நாட்டுப்படகுகள் தானாக சரியாகி விடும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் புயல் நேரங்களில் இராமேஸ்வரம் கடல் பகுதி உள்ள வாங்கியது குறித்து கடல்சார் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்ட போது: இது ஒரு இயல்பான ஒன்று. கடல் காற்றின் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டால் கடற்கரை கடல் நீர் உள்வாங்குவது வழக்கம். அதனால் தான் இன்று காலை முதல் கடல் உள்வாங்கி உள்ளது. மேலும் பகல் நேரங்களில் காற்றின் வேகம் மாறும் பட்சத்தில் மீண்டும் கடல் இயல்பு நிலைக்கு திரும்பும். இது குறித்து மீனவர்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்தனர்.