காவல் துறையை கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
காவல் துறையை கண்டித்து, இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பெண்மணி மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை முயற்சி.
HIGHLIGHTS
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் அடுத்த கருப்பக்குடும்பன் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வளர்மதி. இவர் தன்னுடைய குடும்பத்துடன் அதே ஊரில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் குடும்பத்தை அதே ஊரைச் சேர்ந்த சிலர் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தி வருவதாகவும், அதற்கு மறுத்ததால் தொடர்ந்து துன்புறுத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பாக ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேராவூர் ரிங்க் ரோட்டில் சென்ற வளர்மதி மகன் சதீசை வழிமறித்த கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் சதீஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில் இராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கேணிக்கரை போலீசார் குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை. இதனால் மனமுடைந்த வளர்மதி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்தவர்கள் குரல் எழுப்பவே அருகில் இருந்த தீயணைப்பு துறையினர் கம்பளியை போட்டு மூடி, தண்ணீரை ஊற்றி தீப்பற்ற விடாமல் தடுத்து காப்பாற்றினார்.
இது குறித்து வளர்மதி கூறுகையில்: அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் தங்களை மதம் மாறச் சொல்லி வற்புறுத்தி வருவதாகவும் தாங்கள் மதம் மாற விரும்பவில்லை என்பதால் தங்களை பல்வேறு வகையிலும் கொடுமைப்படுத்தி தனிமைப்படுத்தி துன்புறுத்துவதாகவும் இது குறித்து காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி இவ்வளவு கொடுமை உடன் இருப்பதை விட இறப்பதே மேல் என்று கருதி ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக அந்தப் பெண்மணி தெரிவித்தார்.