இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகள் ஆய்வு
Sri Lankan Refugees Camp in Tamilnadu -தேக்காட்டூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தலா 300 சதுர அடியில் 56 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன
HIGHLIGHTS
Sri Lankan Refugees Camp in Tamilnadu -புதுக்கோட்டை மாவட்டத்தில் தேக்காட்டூர் ஊராட்சி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன,
மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில்,அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், தேக்காட்டூர் ஊராட்சி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, அரிமளம் ஊராட்சி ஒன்றியம், தேக்காட்டூர் ஊராட்சி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், ரூ.291.30 இலட்சம் மதிப்பீட்டில் 56 நான்கு வீடுகள் கொண்ட தொகுப்பு வீடுகளும் மற்றும் 2 தனி வீடுகளும் என ஆகமொத்தம் 58 புதிய வீடுகள் கட்டும் பணிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, கடந்த 14.09.2022 அன்று பூமி பூஜை நடத்தி தொடக்கி வைத்தார்.
அதன்படி, தேக்காட்டூர் ஊராட்சி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளில் ஒவ்வொரு வீடுகளும் தலா 300 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வீடுகளில் பொதுமக்களுக்குத் தேவையான கழிப்பறைவசதி, குடிநீர் வசதி, மின்வசதி உள்ளிட்டவைகளுடன் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஆய்வு செய்து, கட்டுமானப் பணிகளை உயர் தரத்துடன் விரைந்து முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் மழைக்காலத்தில் பொதுமக்கள் சிரமமின்றி வசிப்பதற்கு தற்காலிக வசிப்பிடங்கள் அமைக்கவும், இவ்விடத்தில் பொதுமக்களுக்குத் தேவையான கழிப்பறைவசதி, குடிநீர் வசதி, மின்வசதி உள்ளிட்டவைகள் ஏற்படுத்தி தரவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்துவரும் தமிழர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களின் தேவைகளை கேட்டறிந்து, தமிழக அரசு இலங்கைத் தமிழர்களுக்காக செய்துவரும் நலத்திட்ட உதவிகள் குறித்து ஆணையர் எடுத்துரைத்தார். இக்கட்டுமானப் பணிகள் அனைத்தும் உரிய காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டு உங்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது எனவும், மேலும் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் உரிய காலத்திற்குள் நிறைவேற்றப்படும் எனவும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், உதவி செயற்பொறியாளர் கலைவாணி, வட்டாட்சியர் பிரவினாமேரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமுதவள்ளி, வெங்கடேஷ், உதவிப் பொறியாளர் பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2