புதுக்கோட்டை நகர பகுதிகளில் பரவும் மர்ம காய்ச்சலை தடுக்க வேண்டும் : பா.ஜ.க தீர்மானம்
புதுக்கோட்டை நகர பகுதிகளில் பரவி வரும் மர்ம காய்ச்சலை தடுக்க வேண்டும் என பாஜக கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டது.
HIGHLIGHTS
புதுக்கோட்டை நகர பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. பாஜக மாவட்ட துணைத் தலைவரும், நகராட்சி தேர்தல் பொறுப்பாளருமான ஏவிசிசி கணேசன் முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை கீழ ரஜ வீதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் கூட்டம் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் சிவசாமி கண்டியர் கலந்து கொண்டார். நகரப் பொதுச் செயலாளர் லெட்சுமணன் வரவேற்றார். நகராட்சி குடிநீர் சப்ளை இல்லாத காலங்களுக்கு, குடிநீர்வரி செலுத்த விலக்களிக்கவும், நகரில் பரவிவரும் மர்மகாய்ச்சலை தடுக்க அவசர நடவடிக்கை எடுக்கவும்,பால்பண்ணை, சங்கரமடம், அடப்பன்குளம் வழியாக அரசு மருத்துவ கல்லூரிக்கு செல்ல சிறப்பு ஆம்புலன்ஸ் பாதை அமைக்கவும், நகர சாலைகள செப்பனிடவும் மாவட்ட நிர்வாகத்தை கோரியும், காலதாமதமின்றி இந்து சமய திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செய்ய தமிழக அரசை கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
காசி ஶ்ரீவிஸ்வநாதர் ஆலயத்தை புனரமைத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும்,தமிழகம் வரவிருக்கும் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது உட்பட ஒன்பது தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் மறைவிற்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
எதிர்வரும் நகராட்சி தேர்தலை எதிர்கொள்ள 42 வார்டுகளுக்கும் தலா 12 பேர் கொண்ட பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு, அதற்கான பெயர் பட்டியலை நகர பாஜக நிர்வாகிகள் ஒப்படைத்தனர். கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் காடுவெட்டி குமார்,மாவட்ட செயலாளர் வீரன்சுப்பையா, ஓபிசி பிரிவு தலைவர் மணிராஜன், வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ்கண்ணன், தொழில் பிரிவு தலைவர் சீனிவாசன்,ஊடகபிரிவு தலைவர் சந்துரு, நகர துணைத் தலைவர்கள் ரவிக்குமார்,ரவிச்சந்திரன் சிவஇளங்கோ,வனஜா ராம்தாஸ்,பொருளாளர் ஆனந்த்,நகர செயலாளர்கள் கைலாஷ், சுப்பிரமணியன் மற்றும் கிளைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.