குடியரசு தினம்: புதுகை ஆட்சியர் கவிதா ராமு தேசியக்கொடி ஏற்றி வைத்தார்
குடியரசு தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டையில் ஆட்சியர் கவிதா ராமு தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
HIGHLIGHTS
இந்தியாவில் 73 குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
இதன் பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர், திறந்தவெளி ஜீப்பில் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர் சமாதான புறா பறக்கவிடப்பட்டது. மேலும் தேசியக் கொடி கலர் பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன.
இதன் பின்னர், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 525 அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். மேலும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
கொரோனா காலமாக இருப்பதால், மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. பொதுமக்களும் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் முக்கிய அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மட்டும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.