வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு : புதுகையில் பரபரப்பு
புதுக்கோட்டையில் இரவு நேரத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு வீட்டிற்குள் புகுந்ததால் பரபரப்பு நிலவியது.
HIGHLIGHTS
புதுக்கோட்டை மச்சுவாடி அருகே பெக்சல் நகர் பகுதியில், பாலாஜி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டின் அருகே குளம் ஒன்றும் தைல மரக் காடும் உள்ள நிலையில், நேற்றிரவு, பாலாஜியின் வீட்டிற்குள் மலைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து அப்பகுதியினர், தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனிடையே பாம்பு வீட்டைச்சுற்றி அங்கும் இங்கும் ஊர்ந்ததால், வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து அங்குமிங்கும் ஓடினர். இதனிடையே, அப்பகுதியைச் சேர்ந்த, மின்வாரிய தற்காலிக ஊழியர் சேகர் என்ற இளைஞர், துணிவோடு மலைப்பாம்பை பிடித்துள்ளார். பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சாக்குப்பையில் கட்டி அதன் பின் அங்கு வந்த வனத்துறையினரிடம் அந்த பாம்பு ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.