/* */

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு, பாலின சமத்துவ விழிப்புணர்வு பேரணி

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினமாக இன்றைய தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு,  பாலின சமத்துவ விழிப்புணர்வு பேரணி
X

புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதாராமு  தலைமையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு மற்றும் பாலின சமத்துவ விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தொடக்கி வைத்தார்.

புதுக்கோட்டை நீதிமன்ற அலுவலக வளாகத்திலிருந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு ஆகியவற்றின் சார்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தின மற்றும் பாலின சமத்துவ விழிப்புணர்வு பேரணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினமாக இன்றைய தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஊரக வளர்ச்சித்துறையின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண் அலகு மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்றைய தினம் முதல் ஒற்றுமை தினமான 23.12.2022 வரை நான்கு வார காலம் நடைபெற உள்ளது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் குழந்தை திருமணம், குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை என பாலின அடிப்படையிலான வன்முறை ஆகியவற்றால் தனிநபர் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியை தடை செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. பாலின அடிப்படையிலான வன்முறைகளை களையும் முயற்சிகளில் ஒன்றாக பாலின பாகுபாடுகளுக்கு எதிராக பாலின வள மையம் மூலம் பிரசாரம் செய்யப்படவுள்ளது.

இதனையொட்டி மாவட்டம், வட்டாரம், ஊராட்சி, கிராம அளவில் துண்டு பிரசுரங்கள் வழங்குதல், பேரணி, சுவர் விளம்பரம், நாடகம், குறும்படங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்துவது ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை நீதிமன்ற அலுவலக வளாகத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தின விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இப்பேரணியில், குழந்தைகள் உரிமையை பாதுகாப்போம், வன்முறை எந்த வடிவத்தில் இருந்தாலும் எதிர்ப்போம், பாலின வன்முறைக்கு தீர்வு காண்போம், காப்போம் காப்போம் பெண் குழந்தைகளை காப்போம், பாலின வன்முறையை அடியோடு ஒழிப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மகளிர் சுயஉதவிக்குழுவினர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணியாளர்கள், நேரு யுவகேந்திரா உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 500 நபர்கள் பங்கேற்று புதுக்கோட்டை நீதிமன்ற அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கி, புதிய பேருந்து நிலையம் வழியாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் முடிவடைந்தது.

இப்பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் புவனேஸ்வரி, உதவித் திட்ட அலுவலர் ஜெயக்குமார் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Nov 2022 10:00 AM GMT

Related News