புதுக்கோட்டை நகரில் குண்டும் குழியுமாக சாலைகள்: வாகன ஓட்டிகள் அவதி
நகராட்சி நிர்வாகம் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளுக்கு தார்க் கலவை மூலம் நிரந்தர தீர்வுகாண வேண்டும்
HIGHLIGHTS
புதுக்கோட்டை நகர பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. குறிப்பாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையப்பகுதியில் உள்ள சாலையில் அதிக அளவில் குண்டும் குழியுமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் பலர் பள்ளங்களில் தவறி விழுந்து காயமடையும் ஆபத்து தொடர்கிறது. நகராட்சி நிர்வாகம் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளுக்கு தார்க் கலவை மூலம் நிரந்தர தீர்வுகாண்பதை விட்டுவிட்டு, அந்தக் குழிகளில் தற்காலிகமாக மணலை போட்டு மூடுவதால், வாகனங்கள் செல்லும்போது மீண்டும் பள்ளங்களாக மாறிவிடும் அவலம் தொடர்கிறது.
நகராட்சி நிர்வாகம் புதுக்கோட்டை நகர பகுதிகளில் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல் புதுக்கோட்டை நகராட்சிகளில் பல்வேறு இடங்களில் புதைசாக்கடைத் திட்டத்துக்காக அமைக்கப்பட்ட மனிததுளைக்கான மூடிகள் சரியாக மூடாமல் இருப்பதால், வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்கவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாலைகளின் வழியாகத்தான் மாவட்ட ஆட்சியர் உள்பட அரசு அதிகாரிகள் பலர் வாகனங்களில் அலுவலகத்துக்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது