பொது வெளியில் ஐந்து பேருக்கு மேல் கூடுவது சட்ட விரோதமில்லை: உயர்நீதிமன்றம்
குற்ற நோக்கம் இல்லாமல் ஐந்துக்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடுவது சட்ட விரோதமல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
தமிழீழ விவகாரம் தொடர்பாக இலங்கை அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2014ம் ஆண்டு சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் 11 பேர் தாக்கல் செய்திருந்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாணவர்கள் தரப்பில், ஜனநாயக ரீதியக மட்டுமே தாங்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதாக வாதிடப்பட்டது. ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞர், மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், ஐந்து பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடி சட்ட நடவடிக்கையை தடுக்கவும், குற்ற நடவடிக்கைகளுக்காக ஒன்று கூடுதல் ஆகியவையே சட்ட விரோதமான கூடுதல் என கருத முடியும்.
குற்ற நோக்கங்கள் இல்லாமல் பொது வெளியில் ஐந்து பேருக்கு மேல் கூடுவதை சட்ட விரோதமாக கூடுவதாக கருத முடியாது என கூறினார்.
மேலும், ஜனநாயக முறையில் போராடுவதை குற்றமாக கருத முடியாது எனவும் குறிப்பிட்ட நீதிபதி, மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுடார்