நீலகிரி எம்.பி., ஆ.இராசா மனைவி படத்திறப்பு நிகழ்ச்சி : அமைச்சர்கள் பங்கேற்பு
நீலகிரி எம்.பி., ஆ.இராசா மனைவி பரமேஸ்வரி படத்திறப்பு நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர்.
HIGHLIGHTS
கடந்த மே.29 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்த திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பியின் மனைவி பரமேஸ்வரி பட திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர்.
திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும் நீலகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சென்ற மாதம் 29 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த கிராமமான வேலூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பரமேஸ்வரி பட திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே.என்.நேரு, பரமேஸ்வரியின் உருவ படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியின் போது தமிழக வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வெ.கணேசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறையினர் கலந்து கொண்டு மறைந்த பரமேஸ்வரியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.