ஒன்றரை மணி நேரத்தில் திருப்பதி : அசத்தும் வந்தேபாரத் ரயில்
சென்னை சென்ட்ரல் - விஜயவாடா வந்தே பாரத் ரயில், ரேணிகுண்டாவுக்கு ஒன்றரை மணி நேரத்தில் செல்வதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டா ரயில் நிலையம், முக்கிய சந்திப்பாக உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் அதிவிரைவு ரயில்கள், ரேணிகுண்டாவில் நின்று செல்கின்றன.
சென்னை சென்ட்ரல் - ஆந்திர மாநிலம், விஜயவாடா வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் மோடி கடந்த, 24ம் தேதி துவக்கி வைத்தார். இந்த ரயில் செவ்வாய் கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும்.
சென்ட்ரலில் இருந்து அதிகாலை, 5:30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காலை, 7:05 மணிக்கு ரேணிகுண்டா, 8:39 மணிக்கு நெல்லுார், 10:09 மணிக்கு ஓங்கோல், 11:21 மணிக்கு தெனாலி நகரங்களில் நின்று செல்கிறது. சென்னையில் இருந்து விஜயவாடாவுக்கு, 6:40 மணி நேரத்தில் செல்கிறது.
திருப்பதிக்கு அருகே உள்ள ரேணிகுண்டாவுக்கு ஒன்றரை மணி நேரத்தில் செல்வது, திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. இதனால் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்களும், பயணிகளும் அதிகளவில் வந்தேபாரத் ரயிலை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். நாளுக்கு நாள் வந்தேபாரத் ரயிலுக்கு ஆதரவு பெருகி வருவதால், ரயில்களின் எண்ணிக்கையினை உயர்த்த நடவடிக்கை எடுத்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி செல்ல நினைக்கும் பக்தர்களுக்கு விரைவாக ரேணிகுண்டா செல்வதால் வந்தே பாரத் ரயில் பயனுள்ளதாக இருக்கும் என்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.