வடகிழக்கு பருவமழை சென்னையில் அதிகம்; கிருஷ்ணகிரியில் குறைவு
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மாநில அளவில் அதிகபட்சமாக சென்னையில் பெய்துள்ளது.
HIGHLIGHTS
வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நிலவிய வானிலை அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்: அக்டோபர் மாதத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் 228.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த காலத்தில் இயல்பான மழை அளவானது 177.6 மில்லி மீட்டராகும். இது இயல்பை விட 29% அதிகம். திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் ஒரே நாளில் அதிகமாக இருபத்தி ஏழு சென்டி மீட்டர் பதிவாகியிருந்தது.
மாவட்ட வாரியான அதிகபட்ச சராசரி மழை அளவாக 347.9 மில்லி மீட்டர் மழை, கோயம்புத்தூர் மாவட்டத்தின் பதிவாகியது. குறைந்தபட்ச மழை அளவாக 111.6 மில்லி மீட்டர் மழை, திருப்பத்தூர் மாவட்டத்தில் பதிவாகியது. நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் பதிவான மழையளவு 452.2 மில்லிமீட்டர். இந்த காலத்தில் இயல்பான மழை அளவு, 179.5 மில்லிமீட்டர். இது இயல்பைவிட 137% அதிகம்.
நாகப்பட்டினம் மற்றும் காயல்பட்டினம் திருப்பூண்டி ஆகிய இடங்களில் அதிகமாக 31 சென்டிமீட்டர் ஒரே நாளில் பதிவாகியது. மாவட்ட வாரியான அதிகபட்ச சராசரி மழை அளவாக 935.0 மில்லி மீட்டர் மழை சென்னை மாவட்டத்தில் பதிவாகியது. குறைந்தபட்ச மழை அளவாக 186.4 மில்லி மீட்டர் மழை, ஈரோடு மாவட்டத்தில் பதிவாகியது. டிசம்பர் மாதத்தில், தமிழ்நாடு மற்றும் புதுவையில் பதிவான சராசரி மழை அளவு 60.4மில்லி மீட்டர் ஆகும்.
இந்த காலத்தின் இயல்பான இயல்பான மழை அளவு 92.6 மில்லி மீட்டராகும். இது இயல்பை விட 35% குறைவு. சென்னை டிஜிபி அலுவலகத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 24 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. மாவட்ட வாரியான அதிகபட்ச சராசரி மழை அளவாக, 210.2 மில்லி மீட்டர் மழை, சென்னை மாவட்டத்தில் பதிவாகியது. குறைந்தபட்ச மழை அளவாக 19.1 மில்லி மீட்டர் மழை ஈரோடு மாவட்டத்தில் பதிவாகியது.
மொத்தமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் பதிவான சராசரி மழை அளவு 714.3 மில்லி மீட்டராகும். இந்த காலத்தின் இயல்பான அளவு 449.7 மில்லி மீட்டராகும்.இது இயல்பை விட 59% அதிகம். மாவட்ட வாரியாக அதிகபட்ச சராசரி மழை அளவு 1360.4 மில்லிமீட்டர் மழை, சென்னை மாவட்டத்தில் பதிவாகியது. குறைந்தபட்சம் மழை அளவாக 442.0 மில்லி மீட்டர் மழை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதிவாகியது.