வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்க கடலில் நாளை மறுதினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
HIGHLIGHTS
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக பெய்து வந்த நிலையில், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பெரும்பாலான இடங்களில் மழை குறைந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது.
இந்த நிலையில் வங்க கடலில் வெள்ளிக்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்துக்கு பெரிய அளவு மழைக்கான வாய்ப்பு இல்லை. குமரிக்கடல், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 35 கி.மீ. முதல் 50 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி வரை செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவகாற்றின் காரணமாக, தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை இன்று முதல் 19-ந்தேதி வரை பெய்யக்கூடும். வடமாவட்டங்கள் மற்றும் பிற இடங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.