Nationally Best Tourist Village Ullada- தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமம் ‘உல்லாடா’ அறிவிப்பு - பெருமை அடைந்த நீலகிரி மக்கள்
Nationally Best Tourist Village Ullada- நீலகிரி மாவட்டம், கேத்தி பள்ளத்தாக்கில் உள்ள உல்லாடா கிராமம், தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
HIGHLIGHTS
Nationally Best Tourist Village Ullada- தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமங்களை தேடும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி சிறந்த சுற்றுலா கிராம போட்டியை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி தொடங்கி வைத்தார்.
உள்ளூரின் கலை, கலாசாரம் மற்றும் மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தி, பாதுகாக்கும் கிராமங்களை கவுரவிப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். இதற்காக தனி இணையதளமும் தொடங்கப்பட்டது. இதில் கலந்துகொள்ள அனைத்து தரப்பினரையும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி இருந்தார்.
இதையடுத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 795 விண்ணப்பங்கள் மத்திய சுற்றுலா அமைச்சகத்திற்கு வந்தது. அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் கேத்தி பள்ளத்தாக்கில் உள்ள உல்லாடா கிராமம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான விருதை பெறுவதற்காக உல்லாடா கிராம தலைவர் மாதன் தலைமையிலான குழுவினர் டெல்லிக்கு சென்று உள்ளனர். இவர்களுக்கான பயண செலவு, உணவு செலவு, தங்குமிடம் ஆகியவற்றை மாநில சுற்றுலாத்துறை ஏற்றுள்ளது. வருகிற 27-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.
நீலகிரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
உலகளவில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக நீலகிரி மாவட்டம் பெருமை பெற்றிருக்கிறது. அதனால், பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும், சீசன் காலங்களில் ஊட்டிக்கு வந்து, வாரக்கணக்கில் மாதக்கணக்கில் தங்கி இயற்கை காட்சிகளை ரசித்து செல்கின்றனர். இந்நிலையில், இந்திய அளவில் நடந்த மாபெரும் போட்டியில், 795 கிராமங்கள் பங்கேற்ற கடுமையான சூழலில், தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தில் கேத்தி பள்ளத்தாக்கில் உள்ள உல்லாடா கிராமத்துக்கு, சிறந்த சுற்றுலா கிராமம் என்ற பெருமை கிடைத்திருப்பது, நீலகிரி மாவட்ட மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.