நடுக்கோம்பை பஞ்., தலைவராக திமுக பிரமுகர் போட்டியின்றி தேர்வு
சேந்தமங்கலம் ஒன்றியம், நடுக்கோம்பை கிராம பஞ்சாயத்து தலைவராக திமுக பிரமுகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம், நடுக்கோம்பை கிராம பஞ்சாயத்து தலைவராக பணியாற்றி வந்த அழகப்பன் சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையொட்டி தற்போது அங்கு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் திமுக சார்பில் இறந்துபோன பஞ்சாயத்து தலைவர் மகனும், உதயநிதி ரசிகர் மன்ற தலைவருமான விஜயபிரகாஷ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன், சின்னப்பையன், செல்லாகவுண்டர், அருண் ஆகியோரும் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
வேட்புமனு பரிசீலனையில், தேவையான ஆவணங்கள் இணைக்கப்படாததால் முருகேசன், சின்னப்பையன், செல்லாகவுண்டர் ஆகியோரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அருண் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
இதையொட்டி திமுக பிரமுகர் விஜயபிரகாஷ் நடுக்கோம்பை பஞ்சாயத்து தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சேந்தமங்கலம் எம்எல்ஏ., பொன்னுசாமி, ஒன்றிய செயலாளர் அசோக்குமார், நகர செயலாளர் தனபால் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.