/* */

தும்பல்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி: 350 காளைகள் பங்கேற்பு

தும்பல்பட்டி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 350 காளைகள் பங்கேற்றன.

HIGHLIGHTS

தும்பல்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி: 350 காளைகள் பங்கேற்பு
X

ராசிபுரம் அருகே உள்ள, தும்பல்பட்டி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், காளைகளை தாவிப்பிடித்து அடக்கிய காளையர்கள்.

தும்பல்பட்டி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 350 காளைகள் பங்கேற்றன. போட்டியின்போது காளைகள் முட்டி வீசியெறிந்ததில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர்.

ராசிபுரம் அடுத்த முள்ளுக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட தும்பல்பட்டி கிராமத்தில், ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. துவக்க விழாவிற்கு மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்தார். ஆர்டிஓ சுகந்த், கூடுதல் எஸ்.பி ராஜூ, முன்னாள் முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, மைதானத்தில் குழுமியிருந்த மாடுபிடி வீரர்கள் தாவிப்பிடித்தனர். அப்போது சில காளைகள் மாடுபிடி வீரர்களை முட்டி தூக்கி வீசியது. இதில் 10க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த முகாமில் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. சில வீரர்கள் காளைகளின் திமிழ்களை பிடித்து தொங்கியபடி குறிப்பிட்ட எல்லை வரை சென்றனர். அவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு விழாக்குழுவின் சார்பில் வெள்ளி அரைஞான், கட்டில், பீரோ, சேர் என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதுபோல் வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு விழாக்குழுவின் சார்பில் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக காளைகள் தீவிர மருத்துவ பரிசோதனைக்குப் பின் போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டன. மாடுபிடி வீரர்களும் தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மாடுபிடி வீரர்கள் கீழே விழுந்தால் அடிபடால் இருக்க தேங்காய் நார் பரப்பி விடப்பட்டிருந்தது.

மாடுபிடி வீரர்களை தவிர மற்ற யாரும் மைதானத்திற்குள் நுழைய முடியாதபடி மரத்தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டிருந்தன. மாலை 3 மணி வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்றன. 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்துகொண்டனர். திரளான பொதுமக்கள் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர்.

Updated On: 28 May 2023 12:45 AM GMT

Related News