/* */

வம்பன் -11 உளுந்து சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்: வேளாண்துறை யோசனை

வம்பன் -11 உளுந்து சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்: வேளாண்துறை  யோசனை
X

உளுந்து (பைல் படம்)

வம்பன்-11 ரக உளுந்து சாகுபடி செய்து, அதிக மகசூல் பெறலாம் என்று விதைச்சான்று துறை விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் சித்திரைசெல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு மாநிலம், உளுந்து தேவையில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதற்காக, வேளாண்மைத் துறை, பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. பயறுவகை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க, தனிப்பயிராக மட்டும் இல்லாமல், வரப்பு பயிராக உளுந்து சாகுபடி செய்யலாம். மேலும், நெல் தரிசிலும் விவசாயிகள் உளுந்து சாகுபடியில் ஈடுபடலாம். உளுந்து பயிரில் விளைச்சலை அதிகப்படுத்த, புதிதாக, வம்பன் -11 ரக விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ரக விதைகள் மூலம், விதைப்பண்ணைகளை அமைத்தால் மகசூல் அதிகரிக்கும்.

விவசாயிகளுக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும். வம்பன் -11 ரக விதைகள் மூலம் சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் போது, பயிர்கள் 30 முதல் 40 செ.மீ. உயரம் வரை வளரும். மஞ்சள் தேமல் நோய் மற்றும் இலை சுருங்கும் வைரஸ் நோய்கள் தாக்காத வகையில், வம்பன் -11 ரக விதைகளுக்கு எதிர்ப்பு சக்தி உள்ளது. மேலும், இந்த ரக விதைகள் அதிக காய்ப் பிடிக்கும் திறன் கொண்டது. ஒரே மாதிரியான முதிர்ச்சி அடையும் தன்மை கொண்டது.ஒரு ஏக்கருக்கு சராசரியாக 380 கிலோ மகசூல் தரக் கூடியது.

இது, ஏற்கனவே உள்ள வம்பன்-8 ரகத்தைவிட, 12 சதம் கூடுதலாகும். ஆடி, புரட்டாசி, சித்திரை என அனைத்து மாதங்களிலும், இந்த விதைகளை பயன்படுத்தி பயிர்சாகுபடி செய்யலாம். நாமக்கல் மாவட்டத்தில், உளுந்து விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உள்ள உதவி விதை அலுவலரை அணுகி, விதைப்பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்து கூடுதல் லாபம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 March 2023 11:15 AM GMT

Related News