குட்கா கடத்தல் வழக்கில் கைதான 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நாமக்கல் மாவட்டத்தில் குட்கா கடத்தல் வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காட்டூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில் (39). மளிகைக் கடை உரிமையாளர். இவர் தனது கடையில் 100 கிலோ குட்காவை பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 11-ம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் படி மேலும் 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் திருச்செங்கோடு அருகே உள்ள தோக்கவாடி பஸ்ஸ்டாப் பகுதியில் கடந்த 9-ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், காரில் கடத்தி வரப்பட்ட 270 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் ஈரோடு மாவட்டம் பவானி வரதநல்லூரை சேர்ந்த சதீஷ்குமார் (22) என்பவர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
குட்கா வழக்கில் கைதான செந்தில் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று கலெக்டர் ஸ்ரேயா சிங், செந்தில் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான நகல் சேலம் சிறையில் அடைக்கப்பட்ட இருவரிடமும் போலீஸ் மூலம் வழங்கப்பட்டது.